செய்தியாளர் ஜூட் சமந்த
இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ள பின்னணியில், கஞ்சா கடத்தல் காரர்களை முற்றுகையிடச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் நேற்று (22) சாலியவெவ பகுதியில் பதிவாகியுள்ளது.
சாலியவெவ பொலிஸ் நிலையத்தின் தற்காலிக பொறுப்பதிகாரியின் உத்தரவின் பேரில், வெவ்வேறு முறைப்பாடுகள் தொடர்பான கள விசாரணைகளுக்காக பொலிஸ் சார்ஜன்ட் உபுல் (34911) என்பவர் தனது உத்தியோகபூர்வ மோட்டார் சைக்கிளில் மூனமல்கஸ்வெவ பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் தனது வழக்கமான கடமைகளில் ஈடுபட்டிருந்தபோதே, அவரது தொலைபேசிக்கு அந்த ‘இரகசிய’ அழைப்பு வந்துள்ளது.
ஒற்றன் கொடுத்த ‘ஸ்பாட்’ தகவல்:
“சேர், மூனமல்கஸ்வெவவில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீடொன்றுக்கு பெருமளவிலான கஞ்சாத் தொகை கொண்டுவரப்பட்டிருக்கு…” – தனிப்பட்ட ஒற்றன் வழங்கிய இந்தத் தகவலைக் கேட்டு சார்ஜன்ட் உபுல் சும்மா இருக்கவில்லை. உடனடியாக சாலியவெவ பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்கு விபரத்தை முன்கூட்டியே அறிவித்துவிட்டு, சந்தேகத்துக்கிடமான அந்த வீட்டை நோக்கித் தனது மோட்டார் சைக்கிளை முடுக்கியுள்ளார். ஆனால், அங்கு தனக்காகக் காத்திருந்த விபரீதத்தை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.
பொலிஸ் அதிகாரி வீட்டு வளாகத்திற்குள் நுழைந்து விசாரிக்க முற்பட்ட கணமே, ஆவேசமடைந்த வீட்டு உரிமையாளர் கையில் மண்வெட்டியுடன் பாய்ந்துள்ளார். கண் இமைக்கும் நேரத்திற்குள் பொலிஸ் அதிகாரி மீதும், அவரது மோட்டார் சைக்கிள் மீதும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த பிறிதொரு நபர், காயமடைந்த பொலிஸ் அதிகாரியைச் சமயோசிதமாக மீட்டெடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான சார்ஜன்ட் உபுல், உடனடியாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குத் தகவல் வழங்கியதை அடுத்து, அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நொச்சியாகம மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரச அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்து, கொலைவெறித் தாக்குதல் நடத்திய பிரதான சந்தேகநபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பியோடியுள்ளார். தலைமறைவாகியுள்ள சந்தேகநபரைச் சட்டத்தின் முன் நிறுத்த சாலியவெவ பொலிஸார் விசேட வலைவீச்சு வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.


