புத்தளம், வனாத்தவில்லுவ பகுதியில் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கிய சோகக் கதையொன்று பதிவாகியுள்ளது. மங்களபுர ஏரியின் அழகிய தாமரை மலர்களைப் பறிப்பதற்காக, ஆசையோடு தோணியேறிச் சென்ற 6 பாடசாலை மாணவர்களின் பயணம், மரணப் பயணமாக மாறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
வழக்கமான ஒரு நாளாகத் தொடங்கிய அந்த மாலைப் பொழுது, சில நிமிடங்களிலேயே பெரும் கூச்சலாகவும் மரண ஓலமாகவும் மாறியுள்ளது. மாணவர்கள் 6 பேரும் ஏரியின் நடுப்பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த வேளையில், அவர்கள் பயணித்த தோணி திடீரென நிலைதடுமாறி, அப்படியே தலைகீழாகக் கவிழ்ந்தது.
தண்ணீரில் விழுந்த மாணவர்கள் மரண பயத்தில் தத்தளித்துள்ளனர். அவர்களில் 2 மாணவர்கள் மட்டும் தனது முழு பலத்தையும் திரட்டி, நீந்திச் சென்று அதிர்ஷ்டவசமாக கரை சேர்ந்துள்ளார். ஆனால், ஏனைய நான்கு பிள்ளைகளும் நீச்சல் தெரியாததாலும், நீரின் ஆழத்தினாலும் கதிகலங்கி, கண் இமைக்கும் நேரத்திற்குள் ஏரித் தண்ணீருக்குள் மூழ்கினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நடத்திய தேடுதலின் பின்னர், நீரில் மூழ்கிய நான்கு மாணவர்களது உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் அனைவரும் பண்டாரநாயக்கபுர மற்றும் மங்களபுர ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 வயதுடைய, இளம் பாடசாலை மாணவர்கள் என்பது கிராமத்தையே சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்தத் துயரச் சம்பவம் குறித்து, வனாத்தவில்லுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மலர்களைப் பறிக்கச் சென்ற பிள்ளைகளின் இந்த முடிவு, நீர்நிலைகளுக்கு அருகில் செல்லும்போது பிள்ளைகள் எவ்வளவு அவதானமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையை மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்தியுள்ளது.


