மன்னார் பகுதியில் நீண்ட நாட்களாக அடிப்படை வசதிகளின்றி கல்வி கற்று வந்த முன்பள்ளிப் பிள்ளைகளின் முகங்களில், மக்கள் வங்கியின் பிறந்தநாள் கொண்டாட்டம் புதியதொரு ஒளியை ஏற்றியுள்ளது.
ஒரு நிறுவனம் தனது 65ஆவது மைல்கல்லை எட்டும்போது ஆடம்பரமாகக் கொண்டாடுவதுதான் வழக்கம். ஆனால், மக்கள் வங்கி தனது 65ஆவது பிறந்தநாளை, சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள ஒரு கிராமத்து பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக அர்ப்பணித்து, அனைவரினதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. மக்கள் வங்கியின் மன்னார் கிளையின் முகாமையாளர் திரு ஹக் முஹம்மது அரூஸ் தலைமையில் இந்த நெகிழ்ச்சியான மனிதநேய உதவித்திட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
பூக்குளம் பிள்ளைகளுக்குக் கிடைத்த ‘உயிர்கொடுப்பு’
மன்னார், பூக்குளம் முன்பள்ளி பாடசாலையில் கல்வி பயிலும் குட்டிப் பிள்ளைகள், முறையான தளபாட வசதிகள் இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். தளபாடத் தட்டுப்பாடு என்பது அந்தப் பிள்ளைகளின் அன்றாட கற்றல் ஆர்வத்தையே பாதித்திருந்தது. இதனைத் துல்லியமாக அடையாளம் கண்டுகொண்ட மக்கள் வங்கியின் மன்னார் கிளை அதிகாரிகள், அந்தப் பாடசாலைக்கு நேரடியாகச் சென்று பிள்ளைகளுக்குத் தேவையான அத்தியாவசிய தளபாடச் சாமான்களை முற்றிலும் இலவசமாக அன்பளிப்புச் செய்துள்ளனர்.
இந்தத் தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வானது வெறும் ஒரு கொடுக்கல் வாங்கலாக அமையாமல், அந்தப் பகுதி மக்களின் நீண்டகாலக் குறைபாட்டைத் தீர்க்கும் ஒரு உன்னத நிகழ்வாக அமைந்தது. மன்னார் மக்கள் வங்கியின் முகாமையாளர் உற்பட ஏனைய அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் எனப் பலரது முன்னிலையில் இந்த உதவிப் பொருட்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. “எங்கள் பிள்ளைகளின் கல்விக்குக் கிடைத்த ஆகச்சிறந்த பிறந்தநாள் பரிசு இது” எனப் பெற்றோர் இதன்போது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.






