கொழும்பு பாதாள உலகத்தின் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை திரைமறைவிலிருந்து இயக்கி வந்ததாகக் கருதப்படும் ‘கிராண்ட்பாஸ் லொகு நோனா’வின் சொத்துக் குவியல் மீதான பிடி இறுகியுள்ளது. சட்டத்தின் வலைக்குள் சிக்காதவாறு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த இவருக்கு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று (08) மரண அடி கொடுத்துள்ளது.
இலங்கையின் போதைப்பொருள் தடுப்பு வரலாற்றில் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த ஒரு மிக ரகசியமான, துல்லியமான தகவல் தான் இந்த ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் சரித்துள்ளது. உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் சொகுசாக வாழ்ந்து வந்த இந்த பெண், சாதாரண மக்களின் கண்களுக்குப் புலப்படாமல் சட்டவிரோத வியாபாரத்தின் மூலம் கோடிகளை அள்ளிக் குவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைத்த கறுப்புப் பணத்தைக் கொண்டு, சந்தேகத்திற்கு இடமின்றி அவர் அள்ளிய சொத்துக்களின் விபரங்கள் சிஐடியினரின் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அதன்படி, சுமார் 5 கோடியே 70 இலட்சம் ரூபாவிற்கும் அதிக சந்தை மதிப்பைக் கொண்ட இரு பிரதான சொத்துக்களை பொலிஸார் உடனடியாக அடையாளம் கண்டுள்ளனர்.
சந்தேக நபரான இந்த ‘லொகு நோனா’ தனது சட்டவிரோத சொத்துக்களை மாற்றுவதையோ அல்லது விற்பனை செய்வதையோ தடுக்கும் நோக்கில், அடுத்த 7 நாட்களுக்கு இந்த சொத்துக்கள் எதனையும் பயன்படுத்தவோ, பரிமாற்றவோ முடியாதவாறு பொலிஸார் அதிரடியாக முடக்கியுள்ளனர்.
ஆண்களுக்கு நிகராக போதைப்பொருள் கடத்தல் சாம்ராஜ்யத்தில் கொடிகட்டிப் பறந்த இந்த ‘கிராண்ட்பாஸ் லொகு நோனா’வின் ஏனைய சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் குறித்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் தற்போது வலைவீசி விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த அதிர்வலைகளால் கொழும்பு பாதாள உலகமே தற்போது கலங்கிப் போயுள்ளது.


