சொந்த மண்ணிலேயே பிறந்து, வளர்ந்து, அங்கேயே தங்கள் ஆயுளைக் கழித்து விட்ட பிறகும், “நீங்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள் இல்லை” என்று கூறப்பட்டால் அந்த மக்களின் வேதனை எப்படி இருக்கும்? அப்படியொரு கண்ணீர்க் கதையைத்தான் தங்கோட்டுவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஜங்குராவெல, கல்வக மற்றும் அட்டியாவல ஆகிய கிராம மக்கள் பல தலைமுறைகளாகச் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
மாவோயா ஆற்றை அண்டி அமைந்துள்ள இக்கிராம மக்களின் பிரதான ஜீவனோபாயமே செங்கல் மற்றும் ஓட்டு உற்பத்திதான். தமது தொழில் தேவைக்காகவும், மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் பல தலைமுறைகளாக மாவோயாவைச் சுற்றியே இவர்கள் தமது குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். காலப்போக்கில் மக்கள் தொகை பெருகியபோது, அன்றைய அரசியல்வாதி ஒருவரால் ஜங்குராவெல குளத்துப்பகுதியில் இவர்கள் குடியமர்த்தப்பட்டனர். ஆனால், இன்றுவரை அவர்களுக்கான சட்டப்பூர்வ காணி உரிமை வழங்கப்படவே இல்லை!
இவர்களின் வேதனையை மேலும் இரட்டிப்பாக்கியது அண்மையில் வீசிய ‘திட்வா’ சூறாவளிதான்! மா ஓயா பெருக்கெடுத்ததால் இவர்களின் வீடுகள் சுமார் 8 அடி உயரத்திற்கு நீரில் மூழ்கி நாசமாகின. ஆனால், காணிப் பத்திரம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக, வீடுகளைக் கழுவுவதற்கு வழங்கப்பட்ட சிறிய தொகையைத் தவிர, உடைமைகளை இழந்த இந்த ஏழை மக்களுக்குச் சதமேனும் இழப்பீடு கிடைக்கவில்லை.
“நாங்கள் திருமணம் முடித்து 30 வருடங்களாகிறது. வாக்காளர் பட்டியலில் பெயரிருக்கிறது, வீட்டிற்கு மின்சாரமும் தந்திருக்கிறார்கள். தேர்தலின்போதும், கரண்ட் தரும்போதும் எங்களை இந்த நாட்டின் குடிமக்களாக ஏற்கும் கிராம சேவகர், ஏதேனும் நிவாரணமோ உரிமையோ கேட்கப் போனால் ‘அனுமதியற்ற குடிகள்’ என்று விரட்டுகிறார்” எனப் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் கண்ணீருடன் விவரிக்கின்றார்.
நிலைமையை மேலும் சிக்கலாக்கும் வகையில், குடியிருப்புகள் குளத்தின் மேல்பகுதியில் அமைந்துள்ளதால் இங்கிருந்து வெளியேறி வனாதவில்லு பகுதிக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அழுத்தம் தருகின்றனர். ஆனால், “எங்களுக்குத் தெரிந்த தொழிலை விட்டுவிட்டு, அறிமுகமில்லாத ஊருக்குச் சென்று பிள்ளைகளுடன் எப்படி வாழ்வது?” எனக் கேள்வி எழுப்பும் இம்மக்கள், ஏற்கனவே ‘திட்வா’ புயலால் மாதக்கணக்கில் நீரில் மூழ்கிய வனாதவில்லு – சின்னநாகவில்லு பகுதிக்கு எங்களை அனுப்புவது ஒரு பிரச்சினையைத் தீர்க்க முற்பட்டு மற்றொரு பெரும் பேரழிவை உருவாக்குவதற்கே சமம் எனக் குமுறுகின்றனர்.
சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் இவர்களுக்கு, அவர்கள் பிறந்த மண்ணிலேயே சட்டப்பூர்வ உரிமையை வழங்கி, நிம்மதியாக வாழ வழிவகுப்பதே தற்போதைய அரசின் கடமையல்லவா?
செய்தி: ஜுட் சமந்த


