இந்தியப் பெருங்கடலின் அமைதியை சாதகமாக்கிக் கொண்டு, நள்ளிரவு வேளையில் கடல்வழியாக இலங்கைக்குள் பெரும் கடத்தல் முனையப்பட்ட சம்பவம் ஒன்று கற்பிட்டிய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கற்பிட்டிய, கந்தகுளிய – குடாவ கடற்கரைப் பகுதியில், சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான பீடி இலைகள் மற்றும் சிகரெட்டுகள் வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக புத்தளம் விசேட பணியகத்தின் பொலிஸ் சார்ஜன்ட் பண்டார (61578) அவர்களுக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
தகவல் கிடைத்து அடுத்த சில நிமிடங்களிலேயே, கற்பிட்டிய பொலிஸ் பரிசோதகர் பத்திரண தலைமையிலான அதிரடிப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி, மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்ட ஒரு கடத்தல் நெட்வொர்க்கை வெளிச்சம்போட்டுக் காட்டியது.
அங்கே நிறுத்தப்பட்டிருந்த வான் ஒன்றில், 30 கிலோ வீதம் 10 உரைகளில் அடைக்கப்பட்ட 300 கிலோ பீடி இலைகளும், 99,800 சிகரெட்டுகளும் ஏற்றுவதற்குத் தயாராக இருந்தன. பொலிஸாரின் திடீர் வருகையைக் கண்டதும், வானில் இருந்த சந்தேகநபர் ஒருவர் நள்ளிரவு இருளைப் பயன்படுத்தித் தப்பி ஓடியுள்ளார்.
கடத்தல் பொருட்கள் மற்றும் வான் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட நிலையில், தப்பி ஓடிய நபர் யார்? இவ்வளவு பெரிய கடத்தல் பின்னணியில் இயங்கும் சூத்திரதாரிகள் யார்? என்பது குறித்து கற்பிட்டிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
ஜுட் சமந்த



