நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்தத் தெரியாத ஒரு நிர்வாகத்தின் கீழ் இலங்கை நாளுக்கு நாள் அதலபாதாளத்தை நோக்கிச் சரிந்துகொண்டிருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) புதிய அலுவலகத்தை அண்மையில் திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இந்த அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரக்கூடிய தேயிலை, இறப்பர் மற்றும் இரத்தினக்கல் போன்ற பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த வளங்களை மேம்படுத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எவ்வித தொலைநோக்குப் பார்வையும் இல்லை என அவர் சாடினார். பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியைப் பிடித்தவர்கள், இன்னமும் அதே ஏமாற்றுப் பிரசாரங்களை நம்பியே அதிகாரத்தைத் தக்கவைக்க முற்படுவதாக அவர் கவலை வெளியிட்டார்.
நிலையியற் கட்டளைகளுக்குள் ஒளிந்து பொய் பரப்புரையா?
அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டியதோடு நின்றுவிடாது, திசைகாட்டி (NPP) கூட்டணி மீதும் தனது கணைகளை சஜித் பிரேமதாச தொடுத்தார். தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்குப் பின்னால் மறைந்துகொண்டு, நாட்டு மக்களுக்குத் தவறான தகவல்களையும் பொய்களையும் பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் ரஜீவ் அமரசூரியவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ‘முதலமைச்சர் வேட்பாளர்’ பதவி லஞ்சமாகப் பேசப்பட்டதாக திசைகாட்டியினர் நாடாளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு சஜித் பிரேமதாச நேரடியாகப் பதிலளித்தார்.
“எங்களுக்கு அரசியல் லஞ்சம் கொடுத்து பழக்கமில்லை!”
இந்தக் குற்றச்சாட்டை முற்றாக மறுத்த எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய மக்கள் சக்தி தனது அரசியல் வரலாற்றில் யாருக்கும் அரசியல் லஞ்சங்களை வழங்கியதுமில்லை, இனிவரும் காலங்களில் வழங்கப் போவதுமில்லை என ஆவேசமாகத் தெரிவித்தார்.
திசைகாட்டி உறுப்பினர்கள் முன்வைக்கும் இந்த லஞ்சக் குற்றச்சாட்டானது, மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக அவர்களின் அண்மைக்கால அரசியலில் உருவாக்கப்பட்ட “புதிய பொய் மற்றும் உருட்டு” அன்றி வேறொன்றும் இல்லை எனச் சாடிய சஜித் பிரேமதாச, இவ்வாறான வதந்திகளை மக்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை என்றும் வலியுறுத்தினார்.


