இலங்கை அரசியலில் இதுவரை இல்லாத அளவிற்கு சிறுபான்மை மக்களின் குரலை மிக வலுவாக எதிரொலிக்கும் வகையில், 6 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளன. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சூழலில், இக்கூட்டணியின் உயர்மட்ட பிரதிநிதிகள் இன்று (ஆகஸ்ட் 4, 2026) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை நேரில் சந்தித்து அதிரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC), இலங்கைத் தமிழரசுக்கட்சி (ITAK), ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி (DTNA), தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA), இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWC), ஆகிய ஆறு முக்கிய தூண்கள் ஒன்றிணைந்துள்ள இந்த சந்திப்பு, தலைநகர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தத்தமது கட்சியின் தனித்துவமான கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல், சிறுபான்மை சமூகத்தின் பொதுவான உரிமைப் போராட்டங்களுக்காக ஒரே குடையின் கீழ் திரண்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.
நேற்றைய தினம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் நீண்டநாட்களாக இழுபறியில் உள்ள மாகாண சபை தேர்தல்கள் குறித்துப் பேசிய இக்கூட்டணி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவையும் அதிரடியாக சந்தித்துப் பேசியிருந்தது.
அடுத்த 24 மணிநேரத்திற்குள் இந்தியத் தூதரகக் கதவுகளையும் தட்டியுள்ள இப் புதிய கூட்டணி, தமிழ் பேசும் மக்களின் அரசியல் எதிர்காலம், அதிகாரப் பகிர்வு, மாகணசபை தேர்தல் விவகாரம் மற்றும் தற்போதைய கள நிலவரங்கள் குறித்து இந்தியத் தரப்பிற்கு மிகத் தெளிவாக எடுத்துரைப்பதே இந்த மின்னல் வேக சந்திப்பின் முதன்மை நோக்கமாகும்.
கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் தலைமைகள் தனித்தனியாகப் பிரிந்து நின்றதால் ஏற்பட்ட பலவீனங்களை உணர்ந்து, “கூட்டுப் பலமாக வாருங்கள்” என இந்தியத் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது. அதற்குப் பதிலளிக்கும் விதமாகவும், சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த அரசியல் பலத்தை உலகிற்குப் பறைசாற்றும் விதமாகவும் அமைந்த இந்த ராஜதந்திர சந்திப்பு, இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.



