“பணத்தை ஒதுக்கி என்ன பயன்?” – பாராளுமன்றத்தை அதிரவைத்த தஹீர் மரிக்காரின் ஆவேச உரை!
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் பல்வேறு நிவாரணத் திட்டங்களுக்காக பெருந்தொகையான நிதியை ஒதுக்குவதாகக் கூறினாலும், அந்தச் சலுகைகள் அடிமட்டத்தில் உள்ள உண்மையான பயனாளிகளுக்குச் சென்று சேருகிறதா என்பதில் பெரும் சந்தேகம் நிலவுவதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தாஹீர் மரிக்கார் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய பாராளுமன்ற சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் தாஹீர் மரிக்கார் இவ்வாறு தெரிவித்தார்.
மத்திய கிழக்கு யுத்த நிலைமைகளால் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள சூழலில், நாட்டின் சுமை தாங்கும் தூண்களான சிறு தொழில் மீனவர்களும், விவசாயிகளும் சொல்லெணாத் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். “அரசாங்கம் இலக்கங்களில் கணக்குக் காட்டுகிறதே தவிர, கடலுக்குச் செல்லும் ஏழை மீனவனின் பாக்கெட்டுக்கு அந்தச் சலுகை போய்ச் சேரவில்லை” எனவும் அவர் காரசாரமாக எடுத்துரைத்தார்.
கல்பிட்டி மற்றும் நுரைச்சோலை போன்ற நாட்டின் பிரதான விவசாய பகுதிகளில் வாழும் விவசாயிகள் இன்று உரம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். ஒரு மூட்டை உரம் 14,000 முதல் 15,000 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், ஒரு ரூபாயேனும் நிவாரணம் தங்களுக்குக் கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். டீசல், மின்சாரக் கட்டண உயர்வால் விவசாயமும் மீன்பிடியும் முற்றாக முடங்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, நாட்டின் எதிர்காலத் தூண்களான க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் நிலைமை தொடர்பாகவும் அவர் சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார். மன்னார், புத்தளம் போன்ற தூரப்பிரதேசங்களில் பரீட்சை நடக்கும் மையங்களில் மின்வெட்டு மற்றும் நீர் விநியோகத் தடைகள் ஏற்படுவது மாணவர்களின் மனநிலையைப் பெரிதும் பாதிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த விடயத்தில் அரசியல் லாபங்களைப் பார்க்காமல், கல்வி அமைச்சு, மின்சார சபை மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவை ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்ததுடன், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய கடமை என்பதை நினைவூட்டி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.


