ஜுட் சமந்த
மாதம்பே பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பம் தற்போது நிகழ்ந்துள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அதிரடி மாற்றமொன்று பொதுச்சபைக் கூட்டத்தில் அரங்கேறியுள்ளது. சங்கத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றியடைந்துள்ளமை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பரபரப்பான சம்பவம் மாதம்பே கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான ரங்கசாலையில் (அரங்கில்) அண்மையில் நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்திலேயே இடம்பெற்றுள்ளது. கூட்டத்தின் ஆரம்பம் முதலே இரு தரப்பினருக்கும் இடையே நிலவிய இழுபறி நிலை, வாக்கெடுப்பின் போது உச்சக்கட்டத்தை அடைந்தது. முடிவுகள் அறிவிக்கப்பட்ட அந்தத் தருணத்தில் ஒட்டுமொத்த அரங்கமும் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனது. காரணம், வெறும் இரண்டு வாக்குகள் வித்தியாசத்திலேயே இந்த மாபெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக 43 வாக்குகள் கிடைத்த அதேவேளை, தலைவரைக் காப்பாற்றுவதற்காக எதிராக 41 வாக்குகள் மட்டுமே அளிக்கப்பட்டன. மொத்தம் 86 காரியசபை பிரதிநிதிகளைக் கொண்ட இந்தப் பொதுச்சபையில், அன்றைய தினம் 84 பேர் மட்டுமே சமூகமளித்திருந்தனர். சமூகமளிக்காத அந்த இரண்டு உறுப்பினர்கள் யார்? அவர்கள் வந்திருந்தால் முடிவு மாறியிருக்குமா? என்ற கேள்விகளுடன் இந்த நூலிழை வெற்றி தற்போது மாதம்பே மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.


