உலக விளையாட்டு அரங்கில் இலங்கை என்ற குட்டித் தீவின் பெயர் இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஈட்டி எறிதல் களத்தில் இதுவரை எவருமே எட்டாத உச்சத்தை எட்டி, அகில உலகத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் இலங்கையின் வளர்ந்து வரும் நட்சத்திர நாயகன் ரூமேஷ் தரங்க!
அண்மையில் கிளாஸ்கோவில் இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் இதற்கு பிள்ளையார் சுழி போட்டன. மைதானத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மூச்சை அடக்க வைத்த அந்த நொடியில், ரூமேஷ் தரங்கவின் கைகளில் இருந்து புறப்பட்ட ஈட்டி காற்றைப் பிளந்து கொண்டு 89.75 மீற்றர் தூரத்தை எட்டி வீழ்ந்தது. அந்த ஒற்றை எறிதல், அவருக்குத் தங்கப் பதக்கத்தை மட்டுமல்ல, உலக சாதனைக்கான நுழைவுச் சீட்டையும் பெற்றுத் தந்தது.
இந்தத் தங்கப் பதக்க வெற்றியின் தொடர்ச்சியாக, சர்வதேச விளையாட்டு உலகம் தற்போது வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரூமேஷ் தரங்க தற்பொழுது 1,354 புள்ளிகளைப் பெற்று, ஆடவருக்கான ஈட்டி எறிதல் உலகத் தரவரிசையில் கம்பீரமாக முதலிடத்தைப் பிடித்து சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார்!
இது வெறும் ஒரு போட்டியின் வெற்றியோ அல்லது ஒரு பதக்கத்தின் பெருமையோ மட்டுமல்ல; ஈட்டி எறிதல் விளையாட்டு வரலாற்றிலேயே உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த ‘முதல் இலங்கையர்’ என்ற மகத்தான சரித்திர சாதனையை அவர் தாய்நாட்டிற்கு எழுதித் தந்துள்ளார். இமாலய திறமையாலும் விடாமுயற்சியாலும் உலகின் உச்சத்தைத் தொட்டுள்ள ரூமேஷ் தரங்கவிற்கு தற்போது உலகெங்கிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.


