அவுஸ்திரேலியாவிற்குச் செலுத்த வேண்டிய கடன் திருப்பிச் செலுத்துதல் மற்றும் அது தொடர்பான நிதியியல் முறைகேடுகள் குறித்துப் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) விவாதம் சூடுபிடித்த போது, சபையே ஒரு கணம் அதிர்ந்து போனது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், அதிகாரிகளின் பொறுப்பற்ற தனத்தை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி ஆவேசமாக உரையாற்றினார்.
அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) இடம்பெற்ற விசாரணைகளைச் சுட்டிக்காட்டி தனது உரையைத் தொடங்கிய அவர், அங்கு நடந்த கூத்துக்களைச் சபையில் தோலுரித்துக் காட்டினார். நிதியமைச்சிலும் மத்திய வங்கியிலும் பொறுப்பான பதவிகளிலிருக்கும் அதிகாரிகளிடம் கேள்விகளை எழுப்பிய போது, அவர்கள் எவ்வித பொறுப்புணர்ச்சியும் இன்றி ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி ‘பந்து பரிமாற்றம்’ செய்யும் விளையாட்டிலேயே ஈடுபட்டதாக அவர் அம்பலப்படுத்தினார்.
அங்கிருந்த அறிக்கையை வாசித்துக் காட்டிய ரவூப் ஹக்கீம், நாட்டின் வங்கியாளராகச் செயற்படும் மத்திய வங்கி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகத்திற்குரிய இந்தப் பரிவர்த்தனைகள் குறித்து ஏற்கனவே அறிந்திருந்தும் கைகட்டி வேடிக்கை பார்த்ததாகக் சாடினார். “அங்கே ஏதோ தவறு நடக்கிறது” எனச் சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்ந்து அந்தச் சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனைகளுக்கு அங்கீகாரம் வழங்கிப் பணத்தை அனுப்பியுள்ளனர்!
நாட்டின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய மத்திய வங்கி, இத்தகைய சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் குறித்து நிதிப் புலனாய்வுப் பிரிவிடம் முன்கூட்டியே அறிக்கையிட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த பாரிய தவறிலிருந்து மத்திய வங்கி எக்காரணத்தைக் கொண்டும் தப்பியோட முடியாது என அவர் முழங்கினார். நிதி அறிக்கையிடல் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் சார்பில் பணத்தை மாற்றிய வங்கியாளர் என்ற முறையில் மத்திய வங்கி முழுப் பொறுப்பையும் ஏற்றாக வேண்டும்.
ஆனால், இங்குதான் அரசாங்கத்தின் மிகப்பெரிய அதிகாரப் துஷ்பிரயோகம் நடந்துள்ளது! சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியைப் பெற்று மத்திய வங்கி தன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து சாதுரியமாகத் தப்பித்துக்கொண்டுள்ளதாக ஹக்கீம் கடுமையாக விமர்சித்தார். மத்திய வங்கி மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் போன்ற உயர்மட்ட அரச நிறுவனங்களின் இந்தத் தீவிரக் கவனக்குறைவாலும், பொறுப்பற்ற தன்மையாலும் ஏற்கனவே ஒரு தற்கொலைச் சம்பவம் நிகழ்ந்து, ஒரு மூத்த அதிகாரியின் உயிரே பறிபோயுள்ளது என்ற அரச நிர்வாகத்தின் படுதோல்வியை அவர் மிகுந்த வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.


