கல்பிட்டி பகுதியில் படகு கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகள் பலி!

189 views

ஜிஹாத் – பிராந்திய செய்தியாளர்

கல்பிட்டி: மகிழ்ச்சியாக ஆரம்பித்த படகுப் பயணம், சில நிமிடங்களில் ஒரு முழுக் குடும்பத்தையே நிலைகுலையச் செய்த கோரச் சம்பவமாக மாறியுள்ளது. கல்பிட்டி, குறக்கண் சேனை பிரதேசத்தின் தெம்பிலிவத்தை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படகில் பயணித்த வேளையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

பயணத்தின் போது எதிர்பாராத விதமாக படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தண்ணீரில் மூழ்கிய 6 வயதுடைய சிறுவனும், 13 வயதுடைய சிறுமியும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தின் தந்தை உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக அவசர சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அதேவேளை, தாயார் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் இந்த கோர விபத்திலிருந்து உயிர் தப்பியுள்ளார்.

உயிரிழந்த இரு பிள்ளைகளினதும் சடலங்கள் தற்போது பிரேத பரிசோதனைக்காக கல்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. அமைதியாக இருந்த பிரதேசத்தையே உலுக்கியுள்ள இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.