அரச அதிகாரமும் அரசியல் செல்வாக்கும் இருந்தால், துறைமுகத்திற்கே சென்று கடனாக டீசல் அடித்துவிட்டுப் பணத்தைக் கொடுக்காமல் நழுவிவிட முடியுமா? ஆம், அப்படியொரு அதிர்ச்சிச் சம்பவம் இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் கணக்கு வழக்குகளைக் கிளறியபோது அம்பலத்திற்கு வந்துள்ளது.
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பெண் உறுப்பினர் ஒருவரின் மீன்பிடிப் படகுகள் மற்றும் சொகுசு வாகனங்களுக்குக் கோட்பே (Cod Bay) மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து தாராளமாகக் கடனுக்கு டீசல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்காகப் பெறப்பட வேண்டிய சுமார் 14 இலட்சம் ரூபா பணம் இதுவரையிலும் வசூலிக்கப்படவே இல்லை எனும் கசப்பான உண்மை தேசிய தணிக்கை அலுவலகத்தின் அறிக்கையில் போட்டு உடைக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளின் இந்த இலவச டீசல் கூத்து ஒருபுறமிருக்க, தொழில்நுட்பக் குளறுபடிகளால் கடலில் கொட்டப்பட்ட எரிபொருளின் கதையைக் கேட்டால் இன்னும் இரத்தம் உறைந்துவிடும். ஹேந்தல, டிக்கோவிட்ட (Dikowita) துறைமுகத்தின் வடக்குப் முனையத்தில் நிலத்தடி எரிபொருள் குழாய்களைப் பொருத்தியபோது ஏற்பட்ட பயங்கரக் கசிவு காரணமாக, சுமார் 2,700 லீட்டர் டீசல் வீணாக விரயமாக்கப்பட்டுள்ளது.
இங்குதான் அதிகாரிகளின் அலட்சியத்தின் உச்சக்கட்டம் அரங்கேறியுள்ளது! குறித்த குழாய்களைப் பொறுப்பற்ற முறையில் பொருத்திய தனியார் நிறுவனத்திடமிருந்து இந்த இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க அதிகாரிகள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2019ஆம் ஆண்டிலேயே இந்த குழாய் பொருத்தும் பணி இடம்பெற்றிருந்தும், இத்தனை ஆண்டுகளாக இந்த நஷ்டத்தை யார் தலையிலோ கட்டிவிட்டு அதிகாரிகள் நிம்மதியாக இருந்துள்ளனர்.
மக்களின் வரிப்பணமும் நாட்டின் வளமும் இப்படி கண்டமேனிக்கு வீணடிக்கப்பட்ட கதைகள் அனைத்தும், இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் 2024ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தேசிய தணிக்கை அறிக்கையிலேயே தப்பும் தவறுமின்றி வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அரச சொத்துக்களைச் சூறையாடியவர்கள் மீது இனிமேலாவது நடவடிக்கை பாயுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.



