சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய பொலிஸ் அதிகாரிகளே கஞ்சா வியாபாரியிடம் பல இலட்சம் ரூபாய் பேரம் பேசி, கைப்பற்றிய கஞ்சாவையும் பதுக்கிய அதிர்ச்சி சம்பவம் மொனராகலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10ஆம் திகதி தணமல்வில, தெமோதர வௌ பகுதியிலுள்ள பாரிய கஞ்சா தோட்டமொன்றை மொனராகலை குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 6 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். எனினும், அந்த முற்றுகையின் பின்னணியில் நடந்த திரைமறைவு நாடகம் பொலிஸ் திணைக்களத்தையே உலுக்கியுள்ளது.
கஞ்சா தோட்டத்தை சோதனையிட்ட அதிகாரிகள், பெயரளவில் மிகச் சிறிய அளவிலான கஞ்சா பயிர்களை மாத்திரம் அழித்து நாடகமாடியுள்ளனர். எஞ்சிய பெருமளவிலான கஞ்சா பயிர்களை தங்களது வாகனங்களில் ஏற்றிக்கொண்டு தப்பியோடியதுடன், தோட்ட உரிமையாளரிடம் 5 இலட்சம் ரூபாய் கையூட்டல் (லஞ்சம்) வாங்கிக்கொண்டு அவரையும் அந்த இடத்திலேயே சுதந்திரமாக உலவவிட்டுள்ளனர்.
அத்துடன் நில்லாது, தாங்கள் எடுத்துச் சென்ற கஞ்சாவை விற்பனைக்கு தயார் செய்யும் நோக்கில், அதனை உலர்த்துவதற்காக ‘களு’ என அழைக்கப்படும் நபர் ஒருவரிடம் இரகசியமாக ஒப்படைத்ததும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
ஆனால், இவர்களின் இந்த ‘கில்லாடி’ திட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அரச புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து களமிறங்கிய தணமல்வில தலைமையக பொலிஸ் பரிசோதகர், கடந்த 11ஆம் திகதி கஞ்சா தோட்ட உரிமையாளரையும், கஞ்சாவை உலர்த்திய ‘களு’ என்பவரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தார்.
நீதிமன்ற தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் அவ்விருவரிடமும் முன்னெடுக்கப்பட்ட அதிரடி விசாரணைகளில், பொலிஸ் அதிகாரிகளின் இந்த கூட்டுச் சதிப் பின்னணி முழுமையாக அம்பலமானது. இதனையடுத்து, இந்த மோசடியில் நேரடியாகப் பங்கெடுத்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள், ஒரு பொலிஸ் கொன்ஸ்டபிள் மற்றும் வாகன சாரதி ஆகிய நான்கு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


