கொழும்பு கொம்பனித்தெரு பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் ஆலயத்தில் இடம்பெற்றுள்ள பாரிய தங்க நகை மோசடி சம்பவம் ஒன்று தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆலயத்திற்குச் சொந்தமான சுமார் 26.7 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஆலயத்தின் பிரதம குருக்களான சதீஸ்வரன் குருக்களுக்கு வெளிநாட்டுப் பயணத்தடையை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பக்தர்களின் காணிக்கையாகவும், சுவாமி அலங்காரத்திற்காகவும் பாதுகாக்கப்பட்ட நகைகள் திடீரென மாயமானதைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில், அதிர்ச்சி தரும் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
குறித்த பிரதம குருக்கள் கோவில் நகைகளை இரகசியமாக அடகு வைத்து, அதன்மூலம் கிடைத்த பெருந்தொகைப் பணத்தைக் கொண்டு கொட்டாஞ்சேனை புதுச்செட்டித் தெருவில் பெறுமதியான சொத்து ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சந்தேகநபரான சதீஸ்வரன் குருக்கள் தலைமறைவாகி அதிகாரிகளிடமிருந்து தப்பித்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காணாமல்போன புனித நகைகளை மீட்பதற்கும், குறித்த பணத்தில் வாங்கப்பட்ட சொத்துக்களைப் பரிசீலிப்பதற்கும் பொலிஸ் விசேட குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை வளைத்துப் பிடிக்க விரிவான தேடுதல் வேட்டைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


