நீதித்துறையின் உயர்மட்டப் பதவிகளின் அதிகாரக் கட்டமைப்பையே மாற்றியமைக்கக்கூடிய 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் சட்டத்துறையில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
இச்சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட மூன்று முக்கிய தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் தீவிரமாக களமிறங்கி மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் சட்ட வட்டாரங்களில் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த சட்டமூலத்தின் 2வது பிரிவின் கீழ், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 ஆகவும் நீடிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இத்தகைய முன்னெடுப்பானது நீதித்துறையின் சுயாதீனத்துவத்திற்கும், சட்டத்தின் மேலாதிக்கத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, அரசியலமைப்பை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கு சமம் என்றும் மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் அதன் உதவிச் செயலாளர் லகித வாகிஷ்டஆரச்சி மற்றும் பொருளாளர் பசிந்து சில்வா ஆகியோரும், சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் மைத்திரி குணரத்ன மற்றும் மக்கள் ஐக்கிய எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரும் சட்டமா அதிபரை பிரதிவாதியாகக் குறிப்பிட்டு இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
நீதித்துறையின் சமநிலையை கேள்விக்குட்படுத்தும் இச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரமன்றி, நாட்டு மக்களின் நேரடி அங்கீகாரத்தைப் பெறும் வகையிலான பொது வாக்கெடுப்பு (மக்கள் தீர்ப்பு) நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாகும்.


