2027/28-இல் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி? ரணில் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை!
இலங்கை கடன்களை மீளச் செலுத்துவதற்கான நிதியைத் திரட்டுவதில் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளதாகவும், இதனால் 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் நாடு மற்றுமொரு பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் ‘யுத்த தெக்ககட உர தீ’ (இரண்டு போர்களுக்குத் தோள்கொடுத்தல்) நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 2028 ஆம் ஆண்டளவில் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதைத் தொடங்குவதற்கு இலங்கை தனது அந்நியச் செலாவணி கையிருப்பை 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை உயர்த்த வேண்டும் எனவும், மேலதிக நிதி திரட்டலுக்காக 3 பில்லியன் டொலர் பெறுமதியான பிணைமுறிகளை வெளியிட வேண்டியிருக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையே அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய வங்கி கணித்துள்ளது. இந்த இடைவெளியைச் சுட்டிக்காட்டிய ரணில் விக்கிரமசிங்க, “அப்படியானால், கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தொடங்குவதற்குத் தேவையான மீதி நிதியை நாடு எங்கிருந்து திரட்டப் போகிறது?” என்ற விடையற்ற கேள்வியை நாட்டின் முன் எழுப்பியுள்ளார்.


