உலகளாவிய பொருளாதார ஒழுங்கையே புரட்டிப்போடும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Truth Social பக்கத்தில் அதிர்வூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஈரானுடன் எவ்வகையிலேனும் வணிகத் தொடர்புகளைப் பேணும் அல்லது அந்நாட்டுக்கு நிதி மற்றும் வர்த்தக வழிகளில் உயிர்நாடியாக இருக்கும் எந்தவொரு நாடும் “மிகப் பாரிய பொருளாதார விளைவுகளை” எதிர்கொள்ள நேரிடும் என அவர் தனது பதிவில் வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினால் ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மோதலில், அறிவிக்கப்பட்டிருந்த 60 நாள் போர்நிறுத்த உடன்படிக்கை எவ்வித இராஜதந்திர தீர்வுமின்றி முடிவுக்கு வந்துள்ள நிலையிலேயே இந்த அதிரடி நகர்வு இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவுடன் முறையான ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரான் தவறிவிட்டதால், ஒரு நாட்டின் மீது திணிக்கப்படும் வரலாற்றின் மிகக் கடுமையான “பொருளாதார டி-டே” (Economic D-Day) தாக்குதலைத் தாம் தொடங்குவதாக ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு நின்றுவிடாமல், கள்ள எண்ணெய் கடத்தல், பணப் பரிமாற்றங்கள், நாணய மாற்று நிலையங்கள், கப்பல் பதிவுகள் மற்றும் போலி நிறுவனங்களின் மறைமுக வர்த்தகங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், “நீங்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஈரானிய நிறுவனங்கள் நீண்டகாலமாக துபாயின் நிதி அமைப்பைப் பயன்படுத்தி வந்த நிலையில், அண்மைய ஏவுகணை அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) ஈரானுடனான அனைத்து பொருளாதார உறவுகளையும் முறித்துக்கொள்வதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் ஈரானின் பிரதான எண்ணெய் கொள்வனவாளரான சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல், மறைமுக அழுத்தங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அமெரிக்கத் திறைசேரி திணைக்களம் முன்னெடுத்து வரும் ‘Operation Economic Fury’ திட்டத்தின் விரிவாக்கமாக, உலகம் இதுவரை கண்டிராத கடுமையான பொருளாதாரத் தனிமைப்படுத்தல் ஈரானை நோக்கி கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகிறது.
இதேவேளை, உலகின் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) சுமார் 20% கொண்டு செல்லப்படும் ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் எரிசக்தி விலைகள் விண்ணை முட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், இந்த யுத்தமானது உலகப் பொருளாதாரத்தையும் நுகர்வோரையும் எந்தளவு தூரம் பாதிக்கப்போகிறது என்ற பெரும் அச்சம் சர்வதேச அரங்கில் தற்போது எழுந்துள்ளது.


