புத்தளம்: கூரை இல்லாத பாதுகாப்பற்ற வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அடிப்படை வசதிகளற்ற வறிய குடும்பங்களுக்கு நிரந்தர புகலிடம் அமைத்துக் கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் புத்தளத்தில் வேகமெடுத்துள்ளது.
அந்த வகையில், புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தில்லையடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பம் ஒன்றின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் விசேட அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (06.09.2026) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான M.J.M. பைசல் தலைமையில் இந்த நிகழ்வு உத்தியோகபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. “நிரந்தர வீடு, நிரந்தர நம்பிக்கை” என்ற தொனிப்பொருளில், எளிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முழுமையான அரச நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் சமூக பாதுகாப்பையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதை பிரதான இலக்காகக் கொண்டுள்ளது. பல வருடங்களாக நிரந்தர தங்குமிட வசதியின்றி தவித்த குறித்த குடும்பத்திற்கு, இத்திட்டத்தின் ஊடாக வாழ்நாள் உத்தரவாதம் கிடைத்துள்ளது.
இதேவேளை புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அட்டவில்லுவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள வரிய குடும்பம் ஒன்றிற்கும், புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாலாவி கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள மற்றுமொரு வரிய குடும்பம் ஒன்றிற்குமான நிரந்தர வீடொன்றினை அரசாங்க நிதியுதவியுடன் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலாக அபிவிருத்தி குழு தலைவருமான உறுப்பினர் M.J.M.பைசல் அவர்களால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
குறித்த நிகழ்வுகளில் புத்தளம் மாநகர சபையின் முதல்வர் ரின்ஷாட் அகமட், மாநகர சபையின் தில்லையடி வட்டார உறுப்பினரும் பிரஜா சக்தி CDC தலைவருமான சஹ்ரான், புத்தளம் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தலைவர் ஜஹாஸ் மற்றும் இவர்களுடன் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், பிரதேச செயலகத்தின் அரச உத்தியோகத்தர்கள், வீட்டுத்திட்ட கள அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







