- “அனுராதபுரத்தில் நாளை வெடிக்கும் மக்கள் போராட்டம்!” — SLPP அதிரடி அறிவிப்பு
- “பொலிஸ் சீருடை முக்கியமா, திறைசேரி பாதுகாப்பா?” — அரசாங்கத்தைக் கிழித்தெறிந்த காசிலிங்கம்
- NPP-யின் 2 ஆண்டு ஆட்சி: வாக்குறுதிகள் காற்றில் பறந்ததா? SLPP கிளப்பும் புயல்!
கொழும்பு அரசியலின் கவனம் இப்போது வரலாற்றுப் புகழ்பெற்ற அனுராதபுரத்தை நோக்கித் திரும்பியுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் ஒருவேளை உணவிற்கே திண்டாடிக்கொண்டிருக்கும் சூழலில், மக்களின் துயரங்களை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிராகப் பாரிய மக்கள் போராட்டக் களம் ஒன்றை நாளை (12) அனுராதபுரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை பொதுஜன பெரமுன அதிரடியாக அறிவித்துள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆட்சிப் பொறுப்பை ஏற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், NPP அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் மாயையாகவே மாறியுள்ளதாக SLPP-யின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் கடுமையாகச் சாடியுள்ளார். தங்களது நிர்வாகத் தோல்விகளை மறைப்பதற்காக, எதிர்க்கட்சியினர் மீது அரசியல் பழிவாங்கல்களை ஏவிவிடும் ஒரு நாடகத்தை மட்டுமே இந்த அரசு தொடர்ச்சியாக அரங்கேற்றி வருவதாக அவர் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னரும் நாட்டின் பொருளாதாரத்தில் எந்தவொரு மறுமலர்ச்சியும் ஏற்படவில்லை என்பதை புள்ளிவிவரங்கள் உணர்த்துவதாகச் சுட்டிக்காட்டிய அவர், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டாலும், அமைச்சுகளின் அதிகாரத்துவக் கோப்புகள் தூசி படிந்த நிலையிலேயே கிடப்பதாகத் தெரிவித்தார். குறிப்பாக, எதிர்பார்க்கப்பட்ட சினோபெக் முதலீடு கூட எந்தவித முன்னேற்றமுமின்றி அந்தரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளதால், நாட்டின் திறமைவாய்ந்த இளைஞர்கள் வேறுவழியின்றித் தொடர்ந்தும் வெளிநாடுகளுக்குத் தப்பியோடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மறுபுறம், தலைநகருக்கு வெளியே வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் முற்றாக முடங்கியுள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிப்பாலும், தாமதமாகும் கொடுப்பனவுகளாலும் விவசாயிகள் வீதிக்கு வந்துள்ள அதேவேளை, அரிசி, சீனி மற்றும் மீன் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கூட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு மத்தியில் சுமத்தப்பட்டுள்ள கொடூரமான வரிச்சுமை, வருமானமே இல்லாத சாதாரண பொதுமக்களையும், மூடுவிழா காணும் சிறு வணிகங்களையும் ஒட்டுமொத்தமாக நசுக்கி வருகின்றது.
நாட்டின் பாதுகாப்பும் சட்ட ஒழுங்கும் முன்னெப்போதும் இல்லாதவாறு பாதாளத்திற்குச் சென்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய காசிலிங்கம், தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடுகளும் கைக்குண்டுத் தாக்குதல்களும் திறைசேரியை குறிவைத்த மர்ம ஹேக்கர்களின் கொள்ளைகளும் நிகழும் வேளையில், பொலிஸாரின் புதிய சீருடையை வடிவமைக்க பேஷன் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்துவதே ஜனாதிபதியின் பிரதான முன்னுரிமையாக மாறியுள்ளது என எள்ளிநகையாடினார்.
பொய்களை மூலதனமாகக் கொண்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த NPP-யின் உண்மையான முகத்தை நாட்டு மக்களுக்குத் தோலுரித்துக் காட்டும் தருணம் வந்துவிட்டதாகவும், விலைவாசி உயர்வு, வரிச்சுமை, வேலையின்மை போன்ற அனைத்துத் துயரங்களுக்கும் தீர்வு கோரி மக்கள் எழுப்பும் குரலின் தொடக்கப் புள்ளியாக நாளைய அனுராதபுரப் பேரணி அமையும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.





