ஒரு பேஸ்புக் கமெண்ட்… மரணத்தின் விளிம்பில் இலங்கை இளைஞன்: சவூதியில் நடப்பது என்ன?
மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து சவூதி அரேபிய நீதிமன்றின் உத்தியோகபூர்வ தீர்ப்பு ஆவணம் இன்னும் கிடைக்கவில்லை என்றும், தூதரக மட்டத்தில் விடயத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வரவிருக்கும் உச்ச நீதிமன்ற மேன்முறையீட்டுக்கு இன்னும் ஒரு மாத கால அவகாசம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், தாமதமின்றி மிகச் சிறந்த சட்டத்தரணிகள் ஊடாக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கிழக்கிலங்கையின் நற்பிட்டிமுனை கிராமத்தில் ஒரு தாய், தன் வாழ்நாளின் மிகக் கொடூரமான செய்தி வந்துவிடக் கூடாது என இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார். சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அவரது மகன் சிவராசா அனோஜன், சமூக ஊடகத்தில் பதிவிட்ட கருத்து ஒன்றுக்காக மரண தண்டனையை எதிர்நோக்கியிருப்பதாக வெளியாகும் தகவல்கள் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியுள்ளன.
கடந்த காலத்தில் போலி ஆவணங்கள், மொழிபெயர்ப்பு குறைபாடுகள் மற்றும் போதிய சட்ட உதவி இன்றி மரண தண்டனையை எதிர்கொண்ட ரிசானா நபீக்கின் துயர வரலாறு மீண்டும் ஒருமுறை நிகழ்ந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் முகநூலில் கருத்து பதிவிட்டதாகக் கூறி, கடந்த ஜூலை 15 அன்று அனோஜனுக்கு 5 வருட சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது.
அந்த பதிவை சில நிமிடங்களிலேயே அகற்றி, காணொளி மூலம் அனோஜன் பகிரங்க மன்னிப்புக் கோரியிருந்தார். ஆனாலும், அதன் பின்னர் செய்யப்பட்ட மேன்முறையீட்டில் அவரது தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மரண தண்டனை குறித்த உத்தியோகபூர்வ தீர்ப்பு நகல் இன்னும் தமக்குக் கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
ஆனால், அங்கு ஆஜரான சட்டத்தரணி வாய்மொழி மூலம் தெரிவித்த தகவலை அடுத்து, அடுத்த ஒரு மாத காலத்திற்குள் சவூதி உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகளை ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்டு வருகிறது. காலம் பொன் போன்றது; ஒரு மனித உயிரைக் காப்பாற்ற நிமிஷங்கள் கூட தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளன. இந்தச் சூழலில்தான், ரிசானா நபீக் என்ற அப்பாவி பெண்ணின் சோக வரலாறு மீண்டும் கண்முன் நிழலாடுகிறது. 2005-இல் சவூதிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று, போதிய சட்ட உதவி மற்றும் மொழிபெயர்ப்பு வசதிகளற்ற நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு,
2013-இல் சிரச்சேதம் செய்யப்பட்ட ரிசானாவை இந்த நாட்டால் காப்பாற்ற முடியாமல் போனது. அந்த தவறும் புறக்கணிப்பும் அனோஜன் விடயத்திலும் நடந்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் தீயாகப் பரவி வருகிறது. மறுபுறம், அனோஜனின் வழக்கு கையாளப்பட்ட விதம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வெளிவிவகார அமைச்சு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மேன்முறையீட்டுக்கான வெற்றி வாய்ப்பு குறைவு என தூதரகம் கூறியும்கூட ஏன் அவசர அவசரமாக நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன? சட்டக் கட்டணமாக ரூ. 18 லட்சத்து 90 ஆயிரத்து 766 ரூபாய் வெளிவிவகார அமைச்சின் கணக்கில் வைப்பிலிடப்பட்ட பின்னர் என்ன நடந்தது? நியமிக்கப்பட்ட சட்டத்தரணிக்கு பதிலாக வேறொருவர் நீதிமன்றில் தோன்றியது ஏன்? போன்ற கேள்விகள் பூதாகரமாக எழுந்துள்ளன. இது அரசாங்கமா எதிர்த்தரப்பா என்றோ, சிங்களமா தமிழ் அல்லது முஸ்லிமா என்றோ பிளவுபட்டு விவாதிப்பதற்கான நேரமல்ல என்று சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு நாட்டின் சட்டம் மதிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை; அதேநேரம் மன்னிப்பையும் கருணையையும் முன்னிறுத்தும் இஸ்லாமிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டும், இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவைப் பயன்படுத்தியும் ராஜதந்திர மட்டத்தில் பொது மன்னிப்பைக் கோருவதே இப்போதைய ஒரே வழியாகும். சமூக வலைத்தளங்களில் விநாடிப் பொழுதில் இடப்படும் ஒரு பதிவு, வெளிநாடுகளில் வாழும் ஒருவரின் எதிர்காலத்தையே தரைமட்டமாக்கிவிடும் என்ற கசப்பான பாடத்தை இந்தச் சம்பவம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணர்த்தியுள்ளது. அந்த உண்மைகள் ஒருபுறமிருக்க, எஞ்சியிருக்கும் நாட்களுக்குள் அனோஜனை உயிரோடு தாயகம் அழைத்து வருவதே இலங்கை முன்னுள்ள ஒரேயொரு அவசரப் பணியாகும்.


