கண்டியின் பல பகுதிகளில் 22 மணிநேர நீர் வெட்டு!

96 views

கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (08) முற்பகல் முதல் 22 மணிநேர நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இந்த நீர் விநியோகத் தடையானது இன்று (08) காலை 6.00 மணி முதல் நாளை (09) அதிகாலை 4.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அந்தச் சபை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அஸ்கிரிய (மாநகர சபை எல்லை), வேகிரிய, பல்லேமுல்ல புதிய மற்றும் பழைய யட்டிஹலகல, கொண்டதெனிய, ராஜபிஹில்ல சேவை நீர்த்தேக்கம், மெதவெல (பழைய) சேவை நீர்த்தேக்கம் ஆகிய பகுதிகளிலும் இந்த நீர் விநியோகத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கஹவத்த, குருகொட, புளுகொஹதென்ன, கிராகடுவ, கஹல்ல, தெலம்புகஹவத்த, நுகவெல, பாலனகல, மெதவெல (புதிய) சேவை நீர்த்தேக்கம், கலகெதர, மாவத்தகம ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீர் விநியோகம் நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்கள் குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் தெரிவித்துள்ளதுடன், இக்காலப்பகுதியில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.