சத்தியப்பிரமாணம் செய்த பிரதேச சபை உறுப்பினர்கள்!

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்றைய தினம் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.

கட்சியின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் குறித்த சத்தியபிரமாணம் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், ஓய்வு நிலை அதிபர் நாகலிங்கம் சோதிநாதன் ,மாவட்ட பிரஜைகள் குழு தலைவர் கிருஸ்ணபிள்ளை சின்னராசா, முன்னாள் வடமாகாண கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஆகியோர் முன்னிலையில் தமது சத்தியபிரமாணத்தை செய்துகொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,

இலங்கை தமிழரசுக்கட்சி கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையும் திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச சபையும், மட்டக்களப்பு இரண்டு சபைகளுமாக மொத்தம் ஆறு பிரதேச சபைகளில் சுகந்திரமாக எந்தவித இடையூறுகளும் இன்றி ஆட்சி அமைக்கவுள்ளது.

அதேநேரம் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கு ஒரு ஆசனம் போதாது உள்ள நிலையில் அந்த ஒரு ஆசனம் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசிடம் உள்ளது. அந்த ஆசனத்தை கொள்கை ரீதியாக ஆதரவு வழங்க இனங்கி இருக்கின்றனர்.

மேலும் நெடுந்தீவிலும் இவ்வாறு இனங்கியுள்ளனர். ஊர்காவற்துறை பிரதேச சபையில் தமிழ்க்காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.