திறைசேரி மோசடி – அதிகாரிகளின் ‘அலட்சியமே காரணம்!

116 views

திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடியானது ஒரு நுணுக்கமான இணையவழி தாக்குதல் அல்ல என்றும், அதிகாரிகளின் அடிப்படை அலட்சியத்தினால் ஏற்பட்ட விளைவு என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், பாரிய அளவிலான நிதிப் பரிமாற்றங்களின் போது பின்பற்றப்பட வேண்டிய முறையான நிதித் தணிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

மில்லியன் கணக்கான ரூபாய்களைப் பரிமாற்றம் செய்வதற்கு முன்னதாக, அந்த வங்கிக் கணக்கை உறுதிப்படுத்துவதற்காக ஒரு சிறிய தொகையை (Test Payment) அனுப்பிச் சரிபார்க்கும் வழக்கமான நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், பணப்பரிமாற்ற அறிவுறுத்தல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்கள் ஆகியவை மூல ஒப்பந்தங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இத்தகைய பாதுகாப்பு நடைமுறைகள் பொதுவானவை என்றும் அவர் வாதிட்டார்.

பொதுமக்களின் பணம் இழக்கப்பட்டுள்ள நிலையில், இதனை வெறுமனே “பணம் காணாமல் போன” சம்பவமாகத் தட்டிக்கழிக்க முடியாது எனத் தெரிவித்த ஹர்ஷ டி சில்வா, இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் உரிய பொறுப்பை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அரச நிதியைக் கண்காணிப்பது நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு என்பதால், இந்த விடயம் சபையில் முன்வைக்கப்பட வேண்டும் என்றும், அரச நிதி பற்றிய குழு இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.