மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை!

100 views

சர்ச்சைக்குரிய 2013ஆம் ஆண்டு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை மே மாதம் 12ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக 06 எயார்பஸ் A-330 ரக விமானங்களையும், 08 எயார்பஸ் A-350 ரக விமானங்களையும் கொள்வனவு செய்தபோது, 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக அப்போதைய ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பாக இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, சந்தேக நபரான கபில சந்திரசேன கடந்த மார்ச் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, பின்னர் மே மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.