2025ஆம் ஆண்டு இந்திய ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை இரு நாடுகளின் கிரிக்கெட் தொடர்களுக்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி, மைதானத்திலுள்ள மூன்று ஒளிவிளக்கு கம்பங்களில் ஏற்பட்ட பழுதின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்திய எல்லைப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. ரசிகர்கள், இரு அணி வீரர்கள் மைதானத்தை விட்டு பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததால், இந்திய எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட இந்தியாவில் உள்ள சில விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து வரும் மே 11ல் தர்மசாலாவில் நடக்கவுள்ள பஞ்சாப், மும்பை அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, ஐபிஎல் தொடரில் 58 போட்டிகள் நிறைவடைந்துள்ளதுடன் 12 ஆரம்ப சுற்றுப் போட்டிகளும், 4 ஃப்ளே ஓப் போட்டிகளும் , இறுதி சுற்று போட்டியும் நடைபெறவுள்ளன.
இதேவேளை பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் மீதமுள்ள போட்டிகளை இடைநிறுத்தி வைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.