சிலாபம் – புத்தளம் வீதியில் பகீர் விபத்து: ஒருவர் பலி!

168 views

ஆரச்சிக்கட்டுவ: மாலை நேரத்து பரபரப்பில் இயங்கிக்கொண்டிருந்த அந்த வீதியோரக் கடை, அடுத்த சில நொடிகளில் ஒரு மரணக் களமாக மாறும் என்று அங்கிருந்தவர்கள் எவருமே ஊகித்திருக்கவில்லை. சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் ஆரச்சிக்கட்டுவ பகுதியில் கடந்த 21ஆம் திகதி மாலை இடம்பெற்ற அதிவேக கார் விபத்து, ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது.

வழக்கம்போல வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த கடை உரிமையாளரான ராமசாமி கோவிந்தசாமி (வயது 46) என்பவரே இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். புத்தளத்தில் இருந்து சிலாபம் நோக்கி அசுர வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று, வீதியை விட்டு விலகி, வீதியோரமாக இருந்த தற்காலிக கடைக்குள் பாய்ந்ததே இந்த விபரீதத்திற்கு காரணமாக மாறியுள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த மோதலின் வீரியம், கடையை முற்றாக சிதைத்தது மட்டுமல்லாமல், காரில் பயணித்தவர்களையும் படுகாயங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. காரில் இருந்தவர்கள் தன்கொடுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் மூவரும் தற்போது சிலாபம் பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தின் பின்னணியை ஆராய்ந்த பொலிஸாருக்கு அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று தெரியவந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் விபத்து நடக்கும் போது கடுமையான மதுபோதையில் இருந்ததாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிவேகமும், போதையும் ஒரு மனிதனின் உயிரைப் பறித்ததோடு, பலரை வைத்தியசாலைக் கட்டிலில் முடக்கியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ஆரச்சிக்கட்டுவ பொலிஸாரின் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

செய்தித் தகவல்: ஜூட் சமந்த