உலக சந்தையின் தற்போதைய போக்கைக் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கும் இலங்கை வாகன ஓட்டிகளுக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடும் செய்தி வெளியாகியுள்ளது. உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்குமாயின், அதன் நேரடிச் சலுகைகளை எதிர்வரும் ஓகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமளவில் நாட்டு மக்களுக்கு அள்ளி வழங்க முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது தற்போதைய பொருளாதார சூழலில் சாமானிய மக்களின் மாதாந்த பட்ஜெட்டில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாபம் பார்க்கும் எண்ணம் அரசுக்கு இல்லை: அமைச்சரின் அதிரடிப் பேச்சு!
மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு கேள்விக்கு அமைச்சர் மிக ஓப்பனாகப் பதிலளித்துள்ளார். எரிபொருள் விற்பனை மூலம் லாபம் ஈட்டும் நோக்கம் தற்போதைய அரசாங்கத்திற்கு எள் அளவும் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இப்போதும் கூட அரசாங்கம் சும்மா இருக்கவில்லை. ஒவ்வொரு லீட்டர் டீசலுக்கும் சுமார் 100 ரூபாயையும், ஒரு லீட்டர் பெற்றோலுக்கு சுமார் 20 ரூபாயையும் மானியமாக மக்களுக்காக அரசாங்கமே பொறுப்பேற்று வழங்கி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ஏன் நினைத்தவுடன் விலையைக் குறைக்க முடியாது? பின்னணியில் இருக்கும் டெண்டர் ரகசியம்!
“உலக சந்தையில் விலை குறைந்த அடுத்த நிமிடமே ஏன் இலங்கையில் விலையைக் குறைக்கக் கூடாது?” என்ற பொதுமக்களின் ஆதங்கத்திற்கான காரணத்தையும் அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தினார்.
“கடையிலிருந்து ஒரு பொருளை உடனே காசு கொடுத்து வாங்குவது போல எரிபொருளை சந்தையில் இருந்து உடனடியாக வாங்கிவிட முடியாது. அதற்கு சர்வதேச ரீதியில் முறையான டெண்டர் நடைமுறைகள் உள்ளன. முன்கூட்டியே கோரப்படும் டெண்டர்களின்படி, ஒப்புக் கொள்ளப்பட்ட விலையிலேயே நாம் எரிபொருளைக் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது” என அவர் தொழில்நுட்ப ரீதியான நடைமுறையை விளக்கினார்.
எரிபொருள் விலை குறைப்பானது வெறும் வாகன ஓட்டிகளுக்கு மாத்திரமன்றி, நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் துறைக்கும் ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது.
“இதே சாதகமான நிலைமை நீடித்தால் ஓகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமளவில் மக்களுக்கு ஒரு சலுகையை வழங்க முடியும் என நாம் உறுதியாக நம்புகிறோம். நாட்டின் பொருளாதாரத்திற்கும் அது மிக அவசியமாகும். பொருளாதாரத்தின் மேல் மட்டத்தை நாம் தற்போதைய சூழலில் மிக பலமாக கட்டியெழுப்பியிருப்பதனாலேயே இவை அனைத்தையும் எம்மால் செய்ய முடிந்துள்ளது. எங்களால் முடிந்தவரை விரைவில் எரிபொருள் விலையைக் குறைக்குமாறு நாமும் அதிகாரிகளிடம் கோரியுள்ளோம்” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது உரையை நம்பிக்கையோடு நிறைவு செய்துள்ளார்.


