பொலிஸ் உயர் மட்டத்தில் தூள் பறக்கும் மாற்றி யோசிப்பு! மாகாணங்களுக்குப் பொறுப்பான ‘பிக் பாஸ்களுக்கு’ விழுந்த அதிரடி சீட்டு
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் நிர்வாகக் கட்டமைப்பில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பொலிஸ் தலைமையகத்தினால் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு ஒன்று பொலிஸ் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் (SDIGs) மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் (ASPs) அடங்கலாகப் பல உயர் அதிகாரிகள் உடனடி அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அதிரடி ஆட்டத்தின் முதலாவது நகர்வாக, சிறப்புப் பணியகத்தில் பணியாற்றி வந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பத் குமார உடனடியாக கிழக்கு மாகாணத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், இதுவரை தெற்கு மாகாணத்திற்குப் பொறுப்பாக இருந்து களம் கண்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத், சபரகமுவ மாகாணத்தின் புதிய பொலிஸ் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
விஷயம் இதோடு முடியபோவதில்லை. சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் தலைவராகச் செயலாற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவிற்கு, பயிற்சி மற்றும் உயர்மட்டப் பயிற்சிகள் பிரிவின் பணிப்பாளர் என்ற கூடுதல் பொறுப்பு வழங்கி அவரது அதிகாரக் கரம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களின் பாதுகாப்பு வியூகங்களில் ஒரு சுவாரஷ்யமான “நாற்காலி ஆட்டம்” அரங்கேறியுள்ளது. சிறப்புப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.பி. கருணரத்ன வடக்கு மாகாணத்திற்குப் பொறுப்பாக மாற்றப்பட, இதுவரை வடக்கை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் புத்திக சிறிவர்தன, அப்படியே தெற்கு மாகாணத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட அதிகாரிகள் மட்டுமல்லாது, 6 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களும் (ASPs) இந்த இடமாற்றப் பட்டியலில் சிக்கியுள்ளனர். இதில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளராகக் கடமையாற்றிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேரா, பொலிஸ் களப்படைப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிரடி இடமாற்றங்கள் அனைத்தும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் (NPC) இறுதி அங்கீகாரத்திற்கு உட்பட்டே முறைப்படி அமல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது.


