போதைக்கு எதிராக வீதியில் இறங்கி போராடிய மதுரங்குளிய மக்கள்!

தமது பிரதேசத்தை மீட்டுத் தருமாறு அதிகாரிகளுக்கு அவசரக் கோரிக்கை!

143 views

கிராமத்தின் அமைதியைக் குலைத்து, இளம் தலைமுறையின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் அந்த “அறியப்படாத கரம்” எது?

நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதைப்பொருள் அபாயத்தால் அதிர்ந்துபோயுள்ள மதுரங்குளிய – முக்குத்தொடுவாவ மக்கள், இனி பொறுப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். தமது பிரதேசத்தைப் போதைப்பொருள் பிடியிலிருந்து மீட்டெடுக்கக் கோரி, வீதியில் இறங்கி மக்கள் நடத்திய போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை (09) காலை மதுரங்குளிய – முக்குத்தொடுவாவ சந்தியில் திரண்ட பொதுமக்கள், கோஷங்களை எழுப்பித் தமது கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர். முக்குத்தொடுவாவ, தொஸ்தரவத்த, வெல்லவத்த மற்றும் கஜுவத்த ஆகிய சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பெரியோர்கள் முதல் இளைஞர்கள் வரை திரளாகப் பங்கேற்ற இப்போராட்டம், அப்பகுதியைச் சூடேற்றியது.

எவரும் எளிதில் அடையாளம் காண முடியாத வகையில் மறைமுகமாக இயங்கும் சக்திமிக்க போதைப்பொருள் கும்பலொன்று, இப்பகுதியின் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த விபரீத வலையை விரித்துள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாகவும், தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் தங்களது கண்முன்னே சீரழிவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் மக்கள் கொதிப்படைந்தனர்.

போராட்டம் வலுப்பெற்ற நிலையில், கிராமத்துப் மக்களின் குரலுக்குப் பலம் சேர்க்கும் வகையில் மதத் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் நேரடியாகக் களத்தில் குதித்தனர். தொஸ்தரவத்த ஞானோதயாராம விகாராதிபதி வணக்கத்திற்குரிய வெலாசியே தமித்த தேரர், தொடுவாவ பங்குத்தந்தை தனுஷ்க பெர்னாண்டோ அடிகளார் ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் கிஹான் மற்றும் முகமட் பைசல் ஆகியோரும் போராட்டத்தில் பங்கெடுத்து மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

சட்டத்தை உடனடியாகக் கடுமையாக்கி, இந்த நாசகார போதைப்பொருள் வலையமைப்பை அடியோடு வீழ்த்த வேண்டும் என்பதே அனைவரது ஒரே கோரிக்கையாகும். அதிகாரிகளும் பொலிஸாரும் உடனடியாகச் தலையிட்டு, தமது பிள்ளைகளை இந்த பேரழிவிலிருந்து காப்பாற்றி, பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்தாவிட்டால் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்ற எச்சரிக்கையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.