Friday, January 24, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeWorld Newsதென் கொரியாவில் ஏற்பட்ட மிக மோசமான விமான விபத்து!

தென் கொரியாவில் ஏற்பட்ட மிக மோசமான விமான விபத்து!

தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஒரு விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 85 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.

ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர். தாய்லாந்திலிருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் ஒரு தீயணைப்பு துறை அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

விமானத்தின் பின்புறத்தில் உள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.

விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், ஒரு பறவை மோதியதால் விமானத்தில் லேண்டிங் கியர் செயலிழந்தது என யோன்ஹாப் கூறுகிறது.

இறந்த 85 பேரில் 46 பெண்கள் பேர் பெண்கள் என்றும், 39 பேர் ஆண்கள் என்றும் அந்நாட்டின் தேசிய தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்படாத காணொளியில், விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவது தெரிகிறது. பின்னர் இந்த விமானத்தில் தீப்பிடித்தது.

ஒரு விமானப் பணியாளர் மற்றும் ஒரு பயணி மீட்கப்பட்டுள்ளதாகக் கூறும் தீயணைப்புத்துறை, 80 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 30 தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

முவான் தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து 288 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படுகிறது.

ஜேஜூ விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும். தென் கொரியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இது 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular