மாறும் வானிலை! இடியுடன் மழை, 55 கி.மீ வேகப் புயல்காற்று!

156 views

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அடுத்த சில மணித்தியாலங்களுக்கான வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி, நாட்டின் பல கடற்பரப்புகளில் மழையுடனான வானிலையும், பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முல்லைத்தீவிலிருந்து காங்கேசந்துறை, புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனைத் தவிர, நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது பொதுவாக தென்மேற்குத் திசையிலிருந்து வீசக்கூடும். இதன் சாதாரண வேகம் மணித்தியாலத்துக்கு 25 முதல் 35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இருப்பினும், காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 முதல் 55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை

காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

விசேட எச்சரிக்கை: இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில், சம்பந்தப்பட்ட கடற் பகுதிகளில் அவ்வப்போது கடுமையான பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அக்கடற் பிரதேசங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

எனவே, கடற்றொழிலாளர்களும் கடல்சார் ஊழியர்களும் இவற்றுக்கு அமைவாக அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.