வனவாசல உப தொடருந்து நிலையத்திற்கு அருகில் இன்று (16) இடம்பெற்ற விபத்துக்கு,தொடருந்து தண்டவாளத்தின் தடம் மாற்றும் அமைப்பின் இணைப்பு கம்பிகள் கழற்றப்பட்டிருந்தமையே காரணம் என தொடருந்து திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
திண்மக் கழிவு பதப்படுத்தும் வளாகம் மற்றும் பிரதான தொடருந்து பாதை ஆகியவற்றுக்கு இடையே தொடருந்ததை தடம் மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் இணைப்பு கம்பிகளை யாரோ ஒரு நபர் அல்லது ஒரு குழுவினர் திட்டமிட்டோ, ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலோ அல்லது திருடும் நோக்கிலோ கழற்றியுள்ளமையே இந்த விபத்துக்கு தற்போதைக்கு அவதானிக்கப்பட்டுள்ள காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வனவாசல தொடருந்து நிலையத்திற்கு அருகில் கொழும்பு திண்மக் கழிவு பதப்படுத்தும் வளாகம் ஒன்று அமைந்துள்ளது. அதற்கான தொடருந்து பாதை ஒன்றும் காணப்படுகின்றது. எனினும், அது தற்போது பயன்பாட்டில் இல்லை. அந்த இடத்திலேயே இலக்கம் 507 உடைய தொடருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தக் பாகங்கள் கழற்றப்பட்டதன் காரணமாக தடம் மாற்றும் இணைப்பு தளர்வடைந்துள்ளது. இதனால் தொடருந்தின் முன் பெட்டி பிரதான பாதையிலும், பின் பெட்டிகள் திண்மக் கழிவு பதப்படுத்தும் முற்றத்திற்குச் செல்லும் பாதையிலும் பயணித்துள்ளன.
இவ்வாறு இந்த தொடருந்து தொகுதியின் பெட்டிகள் இரண்டு வெவ்வேறு பாதைகளில் பயணித்ததன் காரணமாக, இரண்டாவது பெட்டி தடம் புரண்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நாங்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளோம். இது குறித்து விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என தொடருந்து போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.




