வாஷிங்டன்: அமெரிக்காவின் மேற்குப் பகுதி மாநிலங்களை உலுக்கி வரும் சுமார் 40 பாரிய காட்டுத்தீச் சம்பவங்களில், கொலராடோ மாநிலத்தின் ‘ஆஸ்பென் ஏக்கர்ஸ்’ காட்டுத்தீ தற்போது மிக மோசமான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. டென்வர் (Denver) நகரின் தென்மேற்கு திசையில் கொழுந்துவிட்டு எரியும் இந்தத் தீ, பலத்த காற்று காரணமாக தெற்கு கொலராடோ நோக்கிப் பரவி வருவதால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளிக்கிறது.
ஒரே இரவில் இந்தத் தீப்பொறிகள் விஸ்வரூபம் எடுத்து, மேலும் 44 சதுர கிலோமீற்றர் பரப்பளவை விழுங்கியுள்ளன. இதனால், வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 272 சதுர கிலோமீற்றர் பரப்பளவிலான காடுகள் மற்றும் நிலப்பரப்புகள் தீயின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாக அவசர காலப் பிரிவினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இராட்சத எந்திரங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் மூலமாக தீயைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையிலும், இதுவரை 160 இற்கும் மேற்பட்ட வீடுகளும் கட்டடங்களும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. புவிவெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் எதிரொலியாக, கடந்த சில மாதங்களாக நிலவிய வறட்சியான காலநிலையும், இப்பகுதியில் பதிவான மிகக் குறைந்த பனிப்பொழிவுமே இந்தத் தீ இவ்வளவு வேகமாகப் பரவுவதற்குக் காரணம் என காலநிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிலைமை விபரீதமாவதை உணர்ந்த கொலராடோ அதிகாரிகள், கொலராடோ சிட்டியில் வாழும் சுமார் 2,200 மக்களை உடனடியாகத் தத்தமது உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு உத்தரவிட்டுள்ளனர். இது தவிர, அதனை அண்டிய பியூலா, ராய் மற்றும் சான் இசபெல் ஆகிய கிராமப்புற சமூகங்களும் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகின்றன.
காட்டுத்தீயின் தாக்கத்தை விட, அதனால் எழும் அடர்ந்த புகைமூட்டம் தற்போது பெரும் சவாலாக மாறியுள்ளது. கொலராடோவின் முக்கிய போக்குவரத்து வீதியான ‘இண்டர்ஸ்டேட் 25’ (Interstate 25) நெடுஞ்சாலையில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளதால், அரை மைல் (0.8 கிலோமீற்றர்) தூரத்திற்கு அப்பால் உள்ள எதையும் பார்க்க முடியாத அளவுக்குப் பார்வைத் திறன் குறைவடைந்துள்ளதாகப் போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் அந்தப் பாதையூடான போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



