கொழும்பு: இலங்கையின் பாரம்பரியமிக்க இலக்கிய மற்றும் கல்விசார் எழுத்துத்துறை, வரலாறுகாணாத பெரும் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. அச்சிடப்பட்ட புத்தகங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான வரிகள் காரணமாக, நாட்டில் உள்ள படைப்பாளர்களில் 50% முதல் 60% வரையானோர் எழுத்துத்துறையை முற்றாகக் கைவிட்டு, வாழ்வாதாரத்திற்காக மாற்றுத் தொழில்களை நாடிச் சென்றுள்ளதாக Sri Lanka Book Publishers’ Association கவலை வெளியிட்டுள்ளது.
படைப்பாளிகள் மாத்திரமன்றி, இத்துறையைத் தாங்கிப் பிடித்த சுமார் 40 சதவீதமான புத்தக வெளியீட்டு நிறுவனங்களும் தமது தொழிற்பாடுகளை இடைநிறுத்திவிட்டு வெளியேறியுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
76 ஆண்டு வரலாற்றில் இல்லாத வரிச்சுமை
இலங்கையின் 76 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் இல்லாதவாறு, முதன்முறையாக கடந்த 2023 ஆம் ஆண்டிலேயே வாசிப்புப் புத்தகங்கள் மீது பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் சமூக பாதுகாப்பு வரிகள் அமுல்படுத்தப்பட்டன. வரி விதிக்கப்பட்ட அந்த நாளிலிருந்தே புத்தகங்களின் விலைகள் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து, விற்பனை பெருமளவு சரிந்து ஒட்டுமொத்தத் துறையுமே அதலபாதாளத்திற்குள் தள்ளப்பட்டதாக வெளியீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகில் எங்குமே இல்லாத விநோதம்
உலகின் 95% நாடுகளிலோ அல்லது ஆசிய பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாட்டிலோ அறிவை வளர்க்கும் புத்தகங்களுக்கு இத்தகைய வரிகள் விதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில், வாசிப்புப் புத்தகங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அநீதியான VAT வரியை உடனடியாக நீக்குமாறு Sri Lanka Book Publishers’ Association பணிப்பாளர் சபை உறுப்பினர் காமிணி மொரகொட அதிகாரிகளிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
“சமூகத்தில் இது குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லை. ஏழைப் பெற்றோர்களும், பிள்ளைகளும் தாம் வாங்கும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் அதிகளவிலான வரிப் பணத்தைச் செலுத்துகிறார்கள். இதனால் அதிகம் பயனடைவது அரசாங்கமே தவிர வாசகர்களோ படைப்பாளிகளோ அல்ல” என காமிணி மொரகொட ஆவேசமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், புத்தகங்கள் மீதான வரியை நீக்குவதால் அரசாங்கத்தின் திறைசேரிக்குப் பாரிய இழப்பு எதுவும் ஏற்படாது என்பதைப் புள்ளிவிவரங்களுடன் நிரூபிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்துத்துறையின் எதிர்காலம் என்ன?
அரசாங்கம் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வுகாணத் தவறினால், குறைந்தது இன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் எழுத்தாளர்களோ அல்லது புத்தக வெளியீடுகளோ இல்லாத ஒரு துரதிர்ஷ்டவசமான கலாசார வறட்சி ஏற்படும் என வெளியீட்டாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


