இலங்கையில் வாகன சாரதிகள் எதிர்நோக்கும் நீண்ட நாள் இழுபறிக்கு முடிவு கட்டும் வகையிலான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்காக இனி தபால் நிலையங்களிலோ அல்லது பொலிஸ் நிலையங்களிலோ வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் மற்றும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அனைத்து வாகனப் போக்குவரத்து அபராதங்களும் முழுமையாக ஆன்லைன் (Online) தொழினுட்பம் ஊடாக மட்டுமே செலுத்தப்படுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த அதிரடி டிஜிட்டல் மாற்றமானது வாகன சாரதிகளுக்கு மட்டுமல்லாது, முழு அரச நிர்வாகத்திற்கும் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தவுள்ளது. அரச சேவையின் ஒட்டுமொத்த டிஜிட்டல் மாற்றத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்பத் தேவைகளுக்கான சேவைகளை நாடளாவிய ரீதியில் ஒரு பொதுவான சேவையாக நிறுவுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு நேரடியாக அறிவுறுத்தல் வழங்கினார்.
அரசின் இந்த வேகமான நகர்வுகளுக்குப் பின்னால் மிகப்பெரிய பொருளாதார இலக்கு ஒன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மதிப்பை 30 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆட்பதிவுத் திணைக்களம், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு, கணினி அவசர கால பதிலளிப்பு பிரிவு, தரவுப் பாதுகாப்பு அதிகாரசபை, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் திட்டங்கள் மற்றும் தொலைக்காட்சி டிஜிட்டல் மயமாக்கல் செயற்திட்டம் குறித்து தனித்தனியாக ஆராயப்பட்டது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இலங்கையின் முதல் “டிஜிட்டல் அடையாள அட்டை” (Digital ID) வழங்கும் திட்டம் குறித்த இறுதி விபரமும் இக்கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. இதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி இந்த ஆண்டின் இறுதிக்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும் அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.


