பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று (19) இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பு அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை நேரில் அழைத்து இந்த அவசரக் கலந்துரையாடலை முன்னெடுத்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் தீர்க்கப்படாத பிரச்சினைகள், சமூக மற்றும் பொருளாதார சவால்கள் மற்றும் பிரதேச மட்டத்திலான அபிவிருத்தி முட்டுக்கட்டைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்திற்கு விரிவாகக் கொண்டுவந்தனர்.
இப்பிரச்சினைகளை வெறும் கலந்துரையாடல்களுடன் மட்டுப்படுத்தாமல், பாராளுமன்ற தளத்தில் மிக வலுவாகவும் பரந்தளவிலும் முன்வைப்பதற்கும், தேவையான உரிய அழுத்தங்களையும் தலையீடுகளையும் மேற்கொள்வதற்கும் இச்சந்திப்பில் முக்கிய தீர்மானம் எட்டப்பட்டது.
இக்கலந்துரையாடலில் தமிழ், முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், சாணக்கியன் இராசமாணிக்கம், செல்வம் அடைக்கலநாதன், டொக்டர் அர்ச்சுனா இராமநாதன், எம்.எல்.எம். ஹிஸ்புல்லா, காதர் மஸ்தான், ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், எம்.எஸ்.ஏ. வாஸீத், எம்.டி.எம். தாஹிர், துறைராசா ரவிகரன், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ். உதுமா லெப்பே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளை முன்வைத்தனர்.








