ஜுட் சமந்த
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ஈரநில வலயமாகவும் பறவைகளின் புகலிடமாகவும் திகழும் ஆனவிலுந்தாவ ராம்சார் சரணாலயப் பகுதியில் நேற்று (19) இரவு திடீரென பாரிய தீ பரவல் ஏற்பட்டது. இரவு வேளையில் மளமளவெனப் பரவிய இந்தத் தீயானது சரணாலயத்தின் தாவரப் பகுதிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியதை அடுத்து பிரதேசத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
தீயின் வேகம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய ஆராச்சிக்கட்டுவ பொலிஸார், சிலாபம் நகர சபையின் தீயணைப்புப் பிரிவு வாகனங்கள் மற்றும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் நீர் பவுசர்களைப் பயன்படுத்தி பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். பல மணிநேர இடைவிடாத முயற்சிக்குப் பின்னர் அதிகாலை 2.00 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
கடந்த காலங்களில் தாக்கிய ‘டித்வா’ சூறாவளியின் போது சரணாலயத்திற்குள் உள்ள ஆனவிலுந்தாவ மற்றும் பிங்கட்டிய குளங்களின் கரைகள் உடைந்து சேதமடைந்திருந்தன. இதனால் குளங்களில் தண்ணீர் தேங்காமல் நிலவிய வறட்சியும், அப்பகுதியில் வீசிய கடும் காற்றுமே தீ மிக வேகமாகப் பரவுவதற்கு பிரதான காரணமாக அமைந்ததாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
2001 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி சர்வதேச ராம்சார் ஈரநிலமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட 1393 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இந்த இயற்கைச் சரணாலயத்தில், இத் தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மற்றும் விலங்கின சேதங்கள் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ மதிப்பீடுகள் எதுவும் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



