ஜுட் சமந்த
வழமை போல தமது வாழ்வாதாரத்திற்காக அதிகாலை இருளோடு இருளாக கடலுக்குப் புறப்பட்ட மீனவர்களுக்கு எதிர்பாராத விதமாக பாரிய அனர்த்தம் ஒன்று காத்திருந்தது. சிலாபம் முகத்துவாரத்திற்கு அருகாமையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்ற சிறிய ரகப் படகொன்று திடீரெனக் கவிழ்ந்து கடலில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (20) அதிகாலை 5.00 மணியளவில் தொழிலுக்காக ஆழ்கடலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்து இடம்பெற்றுள்ளது. சிலாபம் – சேதவத்த பகுதியைச் சேர்ந்த 67 வயதான திசாநாயக்ககே ஜயரத்ன என்ற முதியவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதிகாலை வேளையில் கடலில் ஏற்பட்ட திடீர் சீற்றம் மற்றும் கடுமையான நீரோட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் படகு தலைகீழாகக் கவிழ்ந்ததே இவ்விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படகு கவிழ்ந்து இருவரும் கடலில் தத்தளித்த நிலையில், துரிதமாக செயற்பட்டு ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். காப்பாற்றப்பட்ட குறித்த மீனவர் காயங்களுடன் உடனடியாக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


