பாராளுமன்றத்தில் மைக் கட்; சிகரெட் கம்பனிகளுக்கு பில்லியன் கணக்கில் சலுகை: அரசாங்கத்தின் ‘முகமூடியைக்’ கிழித்த சஜித்!
அரசாங்கத்தின் மக்கள் விரோதப் போக்கையும், பாராளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் முயற்சிகளையும் அம்பலப்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அம்பாந்தோட்டை – சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற விவசாயிகளின் குறைபாடுகளைக் கேட்டறியும் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார யதார்த்தத்தை அவர் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
“இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது பாரிய அரிசி ஆலை அதிபர்களைப் பாதுகாப்பதற்கா? அல்லது வெளிநாட்டு அரிசியை நாட்டுக்குள் இறக்குமதி செய்வதற்கா?” என்ற நேரடி வினாவோடு தனது உரையைத் தொடங்கிய சஜித் பிரேமதாச, விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான உத்தரவாத விலை வழங்கப்பட வேண்டும் என்பதில் தமது தரப்பு உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த வாரமும் இது குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதிலும், அரசாங்கத்திடம் பதில்கள் இல்லாததால் அவை ஒத்திவைக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த வாரம் பாராளுமன்றம் கூடும் போது லட்சக்கணக்கான விவசாய மக்களுக்காக பாராளுமன்றமே அதிரும் வகையில் குரல் எழுப்பப் போவதாக எச்சரித்துள்ளார்.
நாட்டின் விவசாயத் துறை இன்று எதிர்கொள்ளும் பிரதான நெருக்கடியான வரிவிதிப்பு குறித்துப் பேசிய அவர், விவசாய உபகரணங்களுக்கான வரிகளைக் குறைப்பதன் மூலம் அவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்த முடியும் எனச் சுட்டிக்காட்டினார். ஆனால், இந்த அரசாங்கம் யாருடைய வரிகளைக் குறைக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலையும் அவர் இதன்போது வெளியிட்டார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை 14 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மட்டும், சிகரெட் நிறுவனத்திற்கு 9.2 பில்லியன் ரூபா (தொண்ணூற்று இரண்டாயிரம் இலட்சம் ரூபா) வரிச்சலுகையை அரசாங்கம் வழங்கியுள்ளது. விவசாயம் செய்யத் தேவையான உபகரணங்களுக்கு வரிச்சலுகை வழங்க முடியாத அரசாங்கம், சிகரெட் நிறுவனத்திற்கு பில்லியன் கணக்கில் சலுகைகளை அள்ளி வழங்கியிருப்பதாக அவர் கடுமையாகச் சாடினார்.
அரசாங்கத்தின் இந்த இரட்டை நிலையை பாராளுமன்றத்தில் கேள்விக்குட்படுத்தும் போது, அங்கு ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் கவலை வெளியிட்டார். கடந்த காலங்களில் நாட்டின் பாரதூரமான பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட சில நிமிட கால அவகாசங்கள் தற்போது முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், விமர்சனங்களைத் தாங்க முடியாத அரசாங்கம், வாய்மூடி மௌனிகளாக எதிர்க்கட்சியை மாற்ற நினைப்பதாகக் கூறினார். இது ஒரு ஜனநாயக அரசாங்கம் அல்ல, மாறாக ஒரு சர்வாதிகார அரசாங்கத்தின் ஆரம்பம் என்பதை தற்போதைய சூழல் மிகத் தெளிவாகக் காட்டுகிறது என்றார்.
இதன் உச்சக்கட்டமாக, பாராளுமன்றத்திற்குள் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்லது நாட்டுக்கு முக்கியமான முன்மொழிவுகள் குறித்துப் பேச முற்படும் போதெல்லாம், சற்றும் யோசிக்காமல் ஒலிவாங்கிகள் (மைக்) துண்டிக்கப்படுவதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார். “அவர்கள் பாராளுமன்றத்திற்குள் எங்களது மைக்கை மாத்திரம் துண்டிக்கவில்லை, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரச் செயற்பாட்டையுமே இன்று துண்டித்து நாசமாக்கியுள்ளனர்” என அவர் சாடினார். நெற்செய்கை மட்டுமன்றி, ஏனைய பயிர்ச்செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளும் இன்று நடுத்தெருவுக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த விவசாய சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.


