இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் அதிரடி எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஆறாவது லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர் நாளை (17) கொழும்பு SSC மைதானத்தில் பிரம்மாண்டமாக ஆரம்பமாகிறது. ரசிகர்களுக்கு உச்சக்கட்ட விறுவிறுப்பையும் பொழுதுபோக்கையும் வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்தொடரின் தொடக்க ஆட்டமே அனல் பறக்கும் மோதலாக அமையவுள்ளது. கடந்த தொடரின் சாம்பியன்களான யாழ்ப்பாணம் கிங்ஸ் அணியும், காலி கெலன்ட்ஸ் அணியும் இரவு 7.45 மணிக்கு மைதானத்தில் நேருக்கு நேர் மோதவுள்ளன.
இந்த முறை LPL தொடரின் தொடக்க விழா, வெறும் கலை நிகழ்ச்சியாக மட்டுமன்றி, உலகளாவிய விளையாட்டுத் தரத்திற்கு நிகராக டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் கண்கவர் ஒளி அமைப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6.15 மணிக்கு ஆரம்பமாகும் இந்த கண்கவர் விழாவில், போட்டியில் பங்கேற்கும் 5 அணிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு, அதனைத் தொடர்ந்து இம்முறைக்கான LPL சாம்பியன் கிண்ணம் உத்தியோகபூர்வமாக திரைநீக்கம் செய்யப்படவுள்ளது.
ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கவுள்ள இப்போட்டிகள் இம்முறை நான்கு பிரதான மைதானங்களில் சுழற்சி முறையில் நடத்தப்படவுள்ளன. நாளை முதல் 19ஆம் திகதி வரை கொழும்பு SSC மைதானத்தில் முதற்கட்டமாக 5 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து தம்புள்ளை மற்றும் பல்லேகல மைதானங்களில் லீக் சுற்றுப் போட்டிகள் அரங்கேறும். இறுதிக்கட்டத் தகுதிச் சுற்று மற்றும் இறுதிப் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மின்னொளியில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட LPL வரலாற்றில், இதுவரை நடந்து முடிந்துள்ள 5 தொடர்களில் 3 தடவைகள் சாம்பியன் பட்டத்தை வென்று யாழ்ப்பாணம் கிங்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டுக்கான தொடர் பல்வேறு காரணங்களால் நடத்தப்படாத நிலையில், 2024இல் கிண்ணத்தை ஏந்திய யாழ்ப்பாணம் கிங்ஸ் அணி, இம்முறையும் தனது மகுடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்புடன் களம் இறங்குகிறது.
இம்முறை தொடரை மேலும் சுவாரஸ்யமாக்க, ஐந்து அணிகளும் அனுபவமிக்க உள்நாட்டு நட்சத்திரங்களின் தலைமையில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதன்படி:
- கண்டி ரோயல்ஸ் – அஞ்சலோ மெதிவ்ஸ்
- கொழும்பு கேப்ஸ் – குசல் மெண்டிஸ்
- தம்புள்ளை சிக்ஸர்ஸ் – தினேஷ் சந்திமால்
- காலி கெலன்ட்ஸ் – தசுன் ஷானக்க
- யாழ்ப்பாணம் கிங்ஸ் – பானுக ராஜபக்ச ஆகியோர் அணிகளை வழிநடத்தவுள்ளனர். இம்முறை மகுடத்தை சூடப்போகும் புதிய கிங்ஸ் யார் என்பதை அறிய ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.




