சிறைச்சாலைகளை இலக்குவைக்கும் நாசகாரச் சக்தி? பாராளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு வாக்குமூலம்!
நாட்டின் சிறைச்சாலை அமைப்பைச் சீர்குலைத்து, பெரும் கலவரத்தை உருவாக்கச் சதித்திட்டம் தீட்டப்படுகிறதா? என்ற அதிர வைக்கும் சந்தேகத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாநாயக்கார பாராளுமன்றத்தில் இன்று வெளிப்படுத்தியுள்ளார். மகர சிறைச்சாலையில் இடம்பெற்ற விகாரமான மோதல் சம்பவம் தொடர்பில் விசேட கூற்றொன்றை விடுத்தபோதே, இந்த அதிரடித் தகவல்களை அவர் சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் வெறும் கைதிகளுக்கிடையிலான மோதல் மட்டுமல்ல, அதன் பின்னணியில் அந்தச் சிறைச்சாலையின் இயல்புநிலையை முழுமையாகச் சீர்குலைக்கும் திட்டமிட்ட முயற்சியொன்று இருந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவத்தின் பின்னணியில் வெளிப்புறத் தரப்பொன்றின் கைகள் உள்ளதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பான முழுமையான விசாரணைகள் தற்பொழுது மிகத் தீவிரமாக முடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், அதிர்ச்சி இதோடு முடியவடையவில்லை! மகர சிறைச்சாலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள இன்னும் மூன்று சிறைச்சாலைகள் தொடர்பாகத் தமக்குக் கிடைத்த மிகவும் முக்கியமான ரகசியத் தகவல்களைச் சிறைச்சாலையின் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக அமைச்சர் ஹர்ஷண நாநாயக்கார சுட்டிக்காட்டினார். இதன் மூலம், ஏனைய சிறைகளில் நடக்கவிருந்த அசம்பாவிதங்கள் முன்கூட்டியே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
அதேவேளை, மகர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தற்பொழுது கணக்கிடப்பட்டு வருகின்றன. சிறைச்சாலையின் அமைதியைச் சீர்குலைத்து, சேதங்களை ஏற்படுத்திய கைதிகள் எவராயினும் அவர்களுக்கு எதிராகச் சட்டம் தனது கடமையை மிகக் கடுமையாகச் செய்யும் என்றும், அவர்கள் தகுந்த தண்டனையை அனுபவிப்பது உறுதி என்றும் அமைச்சர் இறுதியாக எச்சரித்துள்ளார்.


