இலங்கையின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் நிதி அமைப்பின் வெளிப்படைத்தன்மையை முழுமையாக உறுதிப்படுத்தும் நோக்கில், பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மூன்று முக்கிய நிதிச் சட்டமூலங்கள் உத்தியோகபூர்வமாகச் சட்டங்களாக மாறியுள்ளன. கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், இச்சட்டமூலங்களில் இன்று (04) தனது சான்றுரையைப் பதிவுசெய்து கையொப்பமிட்டுள்ளார். இதன் மூலம், சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் மற்றும் நிதிக் குற்றங்களுக்கு எதிரான இலங்கையின் போராட்டம் புதியதொரு பரிமாணத்தை எட்டியுள்ளது.
நிதி உலகையும் தேசிய பாதுகாப்பையும் அச்சுறுத்தும் கறுப்புப் பணச் சுத்திகரிப்பை அடியோடு ஒழிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். இதற்கமைய, 2026 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டத்தின் மூலம், நிதிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை அதிவிரைவாக முன்னெடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில், ஒரு நபர் நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படாத நிலையிலும்கூட, சந்தேகத்திற்குரிய சொத்துக்களைத் தற்காலிகமாகத் தடுத்து வைக்கவும், அவற்றைக் கட்டுப்படுத்தவும் சட்ட ரீதியான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
டிஜிட்டல் யுகத்தின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், 2026 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், கிரிப்டோகரன்சி போன்ற மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்கள் அனைவருமே இனி சட்டபூர்வ நிதிப் பரிவர்த்தனை வரைவிலக்கணத்திற்குள் கொண்டுவரப்படுகின்றனர். மேலும், சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை இடைநிறுத்தி வைக்கும் உத்தரவுக் காலம் 7 நாட்களில் இருந்து 14 வேலை நாட்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதோடு, இதற்கென வலுவான ‘நிதிப் புலனாய்வுப் பிரிவு’ மற்றும் தேசியக் குழு என்பனவும் அமைக்கப்படவுள்ளன.
அதேபோன்று, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில் 2026 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டமும் எவ்வித மாற்றமுமின்றி சட்டமாக்கப்பட்டுள்ளது. இது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச நிதி நடவடிக்கை செயலணியின் (FATF) சர்வதேச தரநிலைகளுக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ளது.
இப்புதிய சட்டத் திருத்தங்கள் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் சட்டவிரோதப் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதுடன், வரவிருக்கும் சர்வதேச பரஸ்பர மதிப்பீடுகளில் இலங்கையின் நிதித் துறையின் நம்பகத் தன்மையையும், தேசிய பாதுகாப்பையும் உலகளவில் உயர்த்திக் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.


