சென்னை: என் கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கைது நடவடிக்கை பயந்தவன் நான் அல்ல என்று கூறியுள்ள உதயநிதி ஸ்டாலின், நான் பேசாத ஒன்றை கட், காப்பி, பேஸ்ட் செய்து பொய்யாக பரப்புகின்றனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். காவிரி பிரச்சனையை திசை திருப்ப முதல்வர் விஜய் முயற்சிப்பதாகவும் கூறிய உதயநிதி ஸ்டாலின், திமுகவின் கடைசி தொண்டன் கூட கைது நடவடிக்கைக்கு பயப்பட மாட்டான் என்றும் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தின் போது முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசியதாக புகார் அளிக்கப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். காலையிலேயே உதயநிதி ஸ்டாலினின் வீட்டிற்கு வந்த போலீசார், அவரை கைது செய்வதில் தீவிரம் காட்டினர்.
இதனிடையே உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது 12 மணி வரை உதயநிதி ஸ்டாலின் கைது செய்யக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனாலும் 11 மணியளவிலேயே உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது வீட்டில் இருந்தே முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் போலீஸ் அராஜகம் என்று கோஷம் எழுப்பினார்.
இதன்பின் காவல்துறை வாகனத்தில் ஏறிய உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தேர்தலுக்கு முன் தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் பேசினேன். டம்மி முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் என்று அனைவருக்கும் ரீல்ஸ் வெறி முற்றி போயுள்ளது.
நான் பேசாத ஒன்றை பேசியதாக கட், காப்பி, பேஸ்ட் செய்து பொய் பரப்புகின்றனர். என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னுடைய கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன். இதற்கு பயப்படுபவம்ன் நான் அல்ல.. திமுகவின் கடைசி தொண்டன் கூட கைதுக்கு பயப்படும் ஆள் கிடையாது. காவிரி பிரச்சனையை திசை திருப்ப என் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை சட்டப்படி எதிர்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.
இதன்பின் காவல்துறை வேனில் இருந்தவாறே உதயநிதி ஸ்டாலின் வெளியில் எட்டி திமுக தொண்டர்களிடம் இருந்து விடைபெற்று கொண்டார். இதனிடையே உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை உதயநிதி கைது செய்யப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரை கைதுசெய்வது ஜனநாயக உணர்வு, அரசியல் நாகரிகத்துக்கு பொருந்தாத செயல்; நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரை கைதுசெய்வதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



