நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவது நாட்டின் சுகாதாரத் துறையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தேசிய கண்காணிப்பு அமைப்பு மற்றும் நேரடிப் புள்ளிவிபரங்களின்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,000 ஐக் கடந்துள்ள அதேவேளை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இந்த திடீர் உயர்வு வெறும் சாதாரண பருவகாலப் பரவல் மட்டுமல்ல, இதற்குப் பின்னணியில் ஒரு பேராபத்து ஒளிந்திருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எதனால்தான் இந்த திடீர் அபாய வீச்சு?
இம்முறை கட்டுக்கடங்காமல் பரவி வரும் டெங்கு தொற்றுக்கு DENV-2 என்ற அதிதீவிர வைரஸ் வகையே பிரதான காரணமாகும் என சுகாதார நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ் வீரியம் மிக்கது என்பதால், நோயாளர்களின் எண்ணிக்கையை சடுதியாக உயர்த்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக, நாட்டின் மொத்தப் பாதிப்பில் 52.78 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.
இதில் கம்பஹா மாவட்டம் இலங்கையிலேயே மிக அதிகப்படியான நோயாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து கொழும்பு மாநகர சபை எல்லை மற்றும் புறநகர்ப் பகுதிகள் இரண்டாவது ஆபத்தான வலயங்களாக மாறியுள்ளன. இது தவிர கண்டி, மாத்தறை, களுத்துறை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்புகள் சடுதியாக உயர்ந்து வருகின்றன.
உங்கள் வீட்டின் அருகிலும் இந்த இடங்கள் இருக்கிறதா?
பொதுவாக வீடுகளில் மட்டுமே நுளம்புகள் பெருகும் என்ற எண்ணத்தை உடைக்கும் வகையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் (NDCU) கள ஆய்வுகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன. டெங்கு நுளம்புகள் அதிகளவில் பெருகும் பிரதான இடங்களாக பாடசாலை வளாகங்கள், அரச அலுவலகங்கள், கைவிடப்பட்ட நிலங்கள், கட்டுமானப் பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொழிற்சாலைகளே அடையாளம் காணப்பட்டுள்ளன. நாம் தினமும் நடமாடும் பொது இடங்களே நோய் பரப்பும் மையங்களாக மாறியிருப்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
இந்த ஆபத்தான சூழலில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் கண்டிப்பான வழிகாட்டல்களை வழங்கியுள்ளனர். காய்ச்சல் ஏற்பட்டு 24 மணிநேரத்திற்கு மேல் (அல்லது 2 நாட்கள்) நீடித்தால், அஸ்பிரின் போன்ற மருந்துகளைச் சுய மருத்துவம் மூலம் உட்கொள்வதை முற்றாகத் தவிர்க்க வேண்டும். உடல் வலி, வாந்தி, வயிற்று வலி மற்றும் கடுமையான தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தகுதிவாய்ந்த அரச அல்லது தனியார் மருத்துவமனையை நாட வேண்டியது கட்டாயமாகும்.
அதேவேளை, பொது சுகாதாரத்தைப் அச்சுறுத்தும் வகையில் நுளம்புகள் பெருகும் சூழலை வைத்துள்ள வளாக உரிமையாளர்களுக்கு எதிராக “சிவப்பு அறிவித்தல்” (Red Notice) விடுக்கப்படுவதுடன், உடனடி நீதிமன்ற வழக்குகளும் கடுமையான சட்ட நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நமது சிறு கவனயீனம் பெரும் பேராபத்தாக மாறக்கூடும் என்பதால், சூழலைச் சுத்தமாக வைத்துக்கொண்டு இந்த டெங்கு அலையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம்!


