“பெட்ரோல் விலையில் நடக்கும் பெரும் மோசடி? – ஆதாரங்களை அடுக்கும் ஹர்ஷா! அதிர்ச்சியில் மக்கள்!”
இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் எரிபொருள் விலை சூத்திரத்தில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை எனவும், அரசாங்கம் தவறான தரவுகளை முன்வைத்து மக்களை திசைதிருப்புவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷா டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், தற்போதைய எரிபொருள் விலை நிர்ணயம் மற்றும் அரசாங்கம் கூறும் மானியங்கள் தொடர்பான பல்வேறு முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) எரிபொருள் விலைகளை நிர்ணயிக்கும் போது, உலக சந்தையில் நிலவும் உண்மையான விலைகளை விடவும் மிக அதிக விலையை அரசாங்கம் கணக்கில் எடுத்துள்ளதாக ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார். அவரது சமீபத்திய கணக்கீடுகளின்படி:
- பெட்ரோல் 92: ஒரு பேரலுக்கு 130 அமெரிக்க டாலர் என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
- ஆட்டோ டீசல்: ஒரு பேரலுக்கு 180 அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உண்மையில் உலகச் சந்தையில் இவ்வளவு அதிக விலையை அரசாங்கம் செலுத்தவில்லை எனவும், இறக்குமதிச் செலவுகள் இதைவிடக் குறைவாகவே இருப்பதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளளார்.
தற்போது விற்பனை செய்யப்படும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 20 ரூபாயும், டீசலுக்கு சுமார் 100 ரூபாயும் மானியம் வழங்குவதாக அரசாங்கம் கூறி வரும் நிலையில், உலகச் சந்தை விலை மற்றும் உண்மையான இறக்குமதி செலவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், அரசாங்கம் கூறுவது போல் இவ்வளவு பெரிய தொகையை மானியமாக வழங்க வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அரசாங்கம் முன்வைக்கும் விலைக் கணக்கீடுகள் உண்மையான இறக்குமதி விலையைப் பிரதிபலிக்கவில்லை. தவறான தரவுகளைக் கொண்டு அதிக விலையை நிர்ணயித்துவிட்டு, பின்னர் மானியம் வழங்குவதாகக் கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும்” என அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
அரசியல் முரண்பாடுகள்
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்தை, தற்போதைய ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியில் இருந்தபோது கடுமையாக எதிர்த்தனர். ஆனால், இன்று அதே முறையை முறையற்ற விதத்தில் கையாள்வது அவர்களின் இரட்டை நிலையை காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஹர்ஷா டி சில்வாவின் கோரிக்கை
எரிபொருள் விலை நிர்ணயக் கட்டமைப்பில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யுமாறு அரசாங்கத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக:
- எரிபொருள் இறக்குமதிக்கு செலவிடப்படும் உண்மையான தொகை.
- அரசாங்கத்தால் விதிக்கப்படும் வரிகள்.
- விநியோக மற்றும் ஏனைய கூடுதல் செலவுகள்.
ஆகியவற்றை பகிரங்கமாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். உண்மை நிலையை மறைக்காமல், முறையான விலை சூத்திரத்தின் மூலம் மக்களுக்கு அதன் பலனை வழங்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சியின் நிலைப்பாடாகும்.


