இலங்கையில் தற்போதைய சூழலில் பாமர மக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அன்றாடம் பேசும் மிக விவாதத்திற்குரிய ஒரு பொருளாக எரிபொருள் விலை மாறியுள்ளது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாகக் குறையும் போதெல்லாம், அதன் பலன் ஏன் இலங்கை நுகர்வோருக்குக் கிடைப்பதில்லை என்ற கேள்வி சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் தீயாய் பரவி வருகின்றது. உலகச் சந்தையில் விலை சரிந்தாலும் நமது நாட்டில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் மும்முரமாக இருப்பதன் பின்னணியில் உள்ள கசப்பான உண்மைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
முதலாவதாக, நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மை என்னவென்றால், ‘கச்சா எண்ணெய் விலை’ என்பதும், நாம் வாங்கும் ‘எரிபொருள் விலை’ என்பதும் முற்றிலும் வேறுபட்ட இரண்டு விடயங்களாகும். கச்சா எண்ணெய் என்பது சுத்திகரிக்கப்படாத ஒரு மூலப்பொருள் மட்டுமே. அது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் எனப் பிரித்தெடுக்கப்படும் போதே அதன் உண்மையான செலவு ஆரம்பமாகிறது. இறுதி நுகர்வோரின் கைக்கு வரும் ஒரு லீற்றர் எரிபொருளின் விலையை வெறும் கச்சா எண்ணெய் விலை மட்டும் தீர்மானிப்பதில்லை; அதன் சுத்திகரிப்புச் செலவு, சர்வதேசக் கப்பல் போக்குவரத்து மற்றும் காப்புறுதி கட்டணங்கள், துறைமுகக் கட்டணங்கள் மற்றும் அரசாங்கத்தின் வரிகள் என ஒரு நீண்ட பட்டியலே விலையைத் தீர்மானிக்கிறது.
இதற்கெல்லாம் மேலாக, இலங்கையின் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்திருப்பது டொலரின் விளையாட்டாகும். இலங்கை சர்வதேசச் சந்தையிலிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வது அமெரிக்க டொலர்களைக் கொண்டே ஆகும். இதனால் உலகச் சந்தையில் எண்ணெய் விலை எவ்வளவுதான் பாதாளத்திற்குச் சென்றாலும், டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தால், நாம் எரிபொருளுக்காகச் செலுத்த வேண்டிய தொகை குறையப் போவதில்லை. உதாரணமாக, உலகச் சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 90 டொலரிலிருந்து 70 டொலராகக் குறைந்தாலும், அதேவேளையில் ரூபாய் பலவீனமடைந்தால் இலங்கைக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்காமல் போய்விடுகிறது.
இங்குதான் மக்கள் மத்தியில் ஒரு நியாயமான கோபமும் கேள்வியும் எழுகிறது. உலகச் சந்தையில் விலை குறைந்தவுடன் “எங்களிடம் பழைய விலைக்கு வாங்கிய இருப்புக்கள் இருக்கின்றன” எனக் கூறி விலையைக் குறைக்க மறுக்கும் அதிகாரிகள், உலகச் சந்தையில் விலை ஏறிய அடுத்த நிமிடமே நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் உள்நாட்டு விலையை உயர்த்துவது எந்த வகையில் நியாயம்? ஜூன் மாதத்திற்குத் தேவையான எரிபொருள் ஒன்றரை மாதங்களுக்கு முன்பே ஓடர் செய்யப்படுகிறது என்பது உண்மையாக இருந்தாலும், விலை உயரும் போது காட்டும் அதே அவசரத்தை, விலை குறையும் போது காட்டி மக்களுக்கு ஏன் அரசு நிவாரணம் வழங்குவதில்லை என்ற கேள்விக்கு அதிகாரிகளிடம் பதிலில்லை.
தற்போது இலங்கையில் எரிபொருள் விலையைத் தீர்மானிக்க ‘விலை சூத்திரம்’ ஒன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த சூத்திரத்தை விடவும் ஆபத்தானது என்னவென்றால், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்கம் எரிபொருள் மீது விதித்துள்ள அதிகப்படியான வரிகளாகும். பல வருடங்களாக நட்டத்தோடு இயங்கிவரும் இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் நட்டத்தை ஈடுகட்டவும், அரசாங்கத்தின் அன்றாட நிர்வாகச் செலவுகளுக்கான வருமானத்தைப் பெற்றுக்கொள்ளவும் எரிபொருளையே அரசு பிரதான வருமான மூலமாகப் பயன்படுத்துகிறது.
சுருக்கமாகக் கூறின், எரிபொருள் விலை உயர்வு என்பது வாகன ஓட்டிகளை மட்டும் பாதிக்கும் விடயமல்ல. அது நாட்டின் போக்குவரத்து கட்டணம், அத்தியாவசியப் பொருட்களின் விலை என சங்கிலித் தொடராக ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் ஸ்தம்பிக்க வைக்கும் வல்லமை கொண்டது. எனவே, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு அரசாங்கம் உண்மையான நிவாரணத்தை வழங்க வேண்டுமாயின், விலை சூத்திரங்களைக் காட்டி உலகச் சந்தையின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, எரிபொருள் மீது சுமத்தப்பட்டுள்ள அநியாயமான வரிகளைக் குறைக்கவோ அல்லது முற்றாக நீக்கவோ முன்வர வேண்டும் என்பதே தற்போதைய காலத்தின் கட்டாயமாகும்.


