உலகளாவிய எரிபொருள் விநியோகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹொர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்க – ஈரான் மோதலின் அதிதீவிர மையப்புள்ளியாக மாறியுள்ளது. “ஹொர்முஸ் நீரிணையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும், அதற்குப் பாதுகாப்புக் கட்டணமாக வளைகுடா நாடுகள் அமெரிக்காவிற்குப் பணம் செலுத்த வேண்டும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த பகிரங்க அறிவிப்பு ஒட்டுமொத்த சர்வதேச அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதற்கு ஈரான் தற்போது மரண அடி கொடுக்கும் வகையில் பதிலடி கொடுத்துள்ளது.
ஈரானின் உச்ச கூட்டு இராணுவக் கட்டளைப் பீடமான ‘காதம் அல்-அன்பியா’ வெளியிட்டுள்ள அதிரடி வீடியோ அறிக்கை, ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்தையும் அதிர வைத்துள்ளது. ஹொர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தில் அமெரிக்கா மூக்கை நுழைப்பதை ஈரான் ஒருபோதும் அனுமதிக்காது என அதில் மிக ஆக்ரோஷமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப்பின் மிரட்டல்களுக்குப் பணியப் போவதில்லை என்பதை ஈரான் இதன்மூலம் உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.
இந்த மோதல் வெறும் வார்த்தைப் போராக மட்டும் நின்றுவிடப் போவதில்லை என்பதை ஈரானின் அடுத்தடுத்த நகர்வுகள் காட்டுகின்றன. டெஹ்ரானால் அங்கீகரிக்கப்பட்ட கடல்வழிப் பாதைகளைத் தாண்டி, ஈரானிய இராணுவத்தின் எவ்வித ஒருங்கிணைப்பும் இல்லாமல் அமெரிக்கப் படைகள் இந்த நீரிணையைக் கடக்க முயன்றால், அவர்கள் இதுவரை கண்டிராத கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என ஈரான் இராணுவம் நேரடியாகவே எச்சரித்துள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்க, ஈரான் தனது அண்டை நாடுகளுக்கும் மிகத் தெளிவான எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. அமெரிக்க இராணுவத்திற்கு இந்த விவகாரத்தில் ஏதேனும் ஒரு வளைகுடா நாடு ஒத்துழைப்பு வழங்கினாலோ அல்லது தளவாட உதவிகளைச் செய்தாலோ, அது ஈரானின் இறையாண்மைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட நேரடிப் போராகவே கருதப்படும் என ஈரான் இராணுவக் கட்டளைப் பீடம் எச்சரித்துள்ளது. இதன்மூலம் அண்டை நாடுகளை அமெரிக்கா பக்கம் சாயவிடாமல் ஈரான் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
“நாங்கள் ஹொர்முஸ் நீரிணை மீதான எங்களது அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் முழு பலத்துடனும் அதிகாரத்துடனும் தொடர்ந்து நிலைநாட்டுவோம்” என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் ஊடகப் பேச்சாளர் அரச ஊடகங்கள் வாயிலாக சூளுரைத்துள்ளார். ஒருவேளை இந்த மோதலால் ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் போர் வெடித்தால், அதற்கான முழுப் பழியும் அமெரிக்காவையும் அதன் கூட்டாளி நாடுகளையுமே சாரும் என ஈரான் இறுதியாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தத் திடீர் பதற்றம் உலகப் பொருளாதாரத்திலும், கச்சா எண்ணெய் விலையிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.


