கல்பிட்டி: இலங்கையின் கிராமப்புறங்களை வறுமையின் பிடியிலிருந்து விடுவித்து, மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் பிரம்மாண்டமான தேசிய திட்டம் ஒன்று களம் இறக்கப்பட்டுள்ளது.
“பிரஜா சக்தி 2026 – ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்” என்ற பெயரிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய வேலைத்திட்டம் நேற்று (2026 ஜூன் 02) கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவிலும் கல்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ எம்.ஜே.எம்.பைசல் அவர்களின் தலைமையில் இந்த ஆரம்ப விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து 25,000 மில்லியன் ரூபாய் என்ற பிரம்மாண்ட நிதி ஒதுக்கீட்டில், நாடு முழுவதும் பல்பரிமாண வறுமையை ஒழிப்பதற்காக இந்த விசேட திட்டம் நேற்றைய தினம் நடைமுறைக்கு வந்துள்ளது.
புதுக்குடியிருப்பில் உதித்த புதிய விடியல்!
இதன் முதற்கட்டமாக, கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில், பிரதேச பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் மிக முக்கிய வாழ்வாதாரத் திட்டமான “உப்பு உற்பத்தி” திட்டத்திற்கான மதகு அமைக்கும் பணி முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டம் அப்பகுதி மக்களின் பொருளாதாரத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் பங்கேற்பு
இந்த விசேட ஆரம்ப விழாவில் அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து புதியதோர் ஆரம்பத்திற்கு வித்திட்டனர்.
குறித்த நிகழ்வில் கல்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.ஆர். ரிகாஸ், உப தவிசாளர் சமன் குமார ஹேரத் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டதுடன், கல்பிட்டி பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் குழுவினர் பங்கேற்று திட்டங்களை வழிநடத்தினர்.
மக்களின் பலமே நாட்டின் பலம்!
வறுமையை ஒழித்து, ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் உயர்த்துவதே “பிரஜா சக்தி 2026” திட்டத்தின் முக்கிய இலக்காகும். இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளி பொதுமக்கள், தங்களின் பொருளாதாரத்தை தாங்களே கட்டியெழுப்பும் இந்த அரிய வாய்ப்பை மிகவும் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்று இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மக்களை உண்மையிலேயே வலுவூட்டும் இந்த “பிரஜா சக்தி” திட்டம், கல்பிட்டி மண்ணில் ஒரு புதிய பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை!






